விருதுநகர் அருகே சிறுமிக்கு திருமணம் செய்து வைத்ததாக 5 பேர் மீது வழக்கு பதிவு
விருதுநகர் அருகே சிறுமிக்கு திருணம் செய்து வைத்ததாக கூறி 5 பேர் மீது காரியாபட்டி போலீஸார் திங்கள்கிழமை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து
விருதுநகர் அருகே சிறுமிக்கு திருணம் செய்து வைத்ததாக கூறி 5 பேர் மீது காரியாபட்டி போலீஸார் திங்கள்கிழமை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கரியனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து-முனியம்மாள் தம்பதியின் குறிப்பிட்ட வயதை அடையாத மகளுக்கும், கே.கரிசல்குளம் குருசாமி-செல்லாயி அம்மாளின் மகன் மாரியப்பன்(21) என்பவருக்கும் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றதாம். இது தொடர்பான புகார் கிடைத்ததும் அங்கு விரைந்து சென்ற மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் பாண்டியம்மாள், ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் மற்றும் சைல்டு லைன் அலுவலர் உள்ளிட்டோர் திருமணம் நடைபெறும் இடத்திற்கு நேரில் சென்றனர்.
அப்போது, அங்கிருந்தவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளனர். பின்னர் திருமண வீட்டார்களிடம் குறிப்பிட்ட வயதை அடையாத சிறுமிக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம் என்பதை எடுத்துரைத்து சிறுமியை பாண்டியன் நகரில் இயங்கி வரும் அரசு குழந்தைகள் காப்பாகத்திற்கு கொண்டு வந்தனர்.
Advertisement
இது தொடர்பாக தன்னை வழக்குரைஞர் கூறிக் கொண்டு மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்திற்கு திங்கள்கிழமை ஒருவர் வந்தார். சமூக நலத்துறை அலுவலர் பாண்டியம்மாள் அறைக்கு சென்று எப்படி திருமணம் முடிந்த பெண்ணை அழைத்து வரலாம் எனக் கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். உங்களுக்கு யார் புகார் செய்தது போன்ற விவரங்களை அளிக்குமாறு கூறினாராம். அதோடு, உடனே திருமணமான பெண்ணை அனுப்பி வைக்காவிட்டால் காரியாபட்டியில் பொதுமக்களை திரட்டி சாலைமறியலில் ஈடுபடுவேன் என்றும் மிரட்டினார். இதையடுத்து சமூக நலத்துறை அலுவலரும் சிறுமியை விடமுடியாது என மறுத்தார்.
இது தொடர்பாக உடனே மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரனுக்கு தகவல் தெரிவித்தார். அதையடுத்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் செய்ய உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் சமூக நலத்துறை அலுவலர் பாண்டியம்மாள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி.மகேஸ்வரனிடம் புகார் செய்தார்.
இது தொடர்பாக காரியாபட்டி காவல் நிலைய போலீஸார் சிறுமியின் பெற்றோர்களான காளிமுத்து-முனியம்மாள், மணமகன் பெற்றோரான குருசாமி-செல்லாயி அம்மாள் மற்றும் மணமகன் மாரியப்பன் ஆகிய 5 பேர் மீது வழக்கு செய்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.