முகப்பு
தற்போதைய செய்திகள்

இரட்டை கொலை குறித்து கடலூர் மத்திய சிறையில் இருந்து சதிதிட்டம் தீட்டியதாக கைதி மீது வழக்குப்பதிவு: நீதிமன்றத்தில் ஆஜர்

சிதம்பரம் இரட்டை கொலை தொடர்பாக கடலூர் மத்திய சிறையிலிருந்து சதி திட்டம் தீட்டியதாக, தற்போது சிறையில் உள்ள சிதம்பரம் அண்ணாமலைநகரைச் சேர்ந்த கைதி சுரேந்தர் (33) மீது அண்ணாமலைநகர்

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:44 AM
பகிர்:

சிதம்பரம் இரட்டை கொலை தொடர்பாக கடலூர் மத்திய சிறையிலிருந்து சதி திட்டம் தீட்டியதாக, தற்போது சிறையில் உள்ள சிதம்பரம் அண்ணாமலைநகரைச் சேர்ந்த கைதி சுரேந்தர் (33) மீது அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். இவ்வழக்கில் சிதம்பரம் நீதிமன்றத்தில் சுரேந்தர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

சிதம்பரம் அண்ணாமலைநகரில் கலுங்குமேட்டில் வசிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர்களான ஆம்புலன்ஸ் குமார் (34), அவரது தம்பி ராஜேஷ் (32) ஆகிய இருவரையும் கடந்த செப்.2-ம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு மோட்டார் சைக்கிள்களில் முகத்தை துணியால் மூடிக்கொண்டு வந்த மர்மகும்பல் ஒன்று  வெடிகுண்டுகளை வீசி வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து, இருவரது தலையை மட்டும் எடுத்துக்கொண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நுழைவுவாயில் முன்பு வைத்துவிட்டு தலைமறைவாகினர்.

இவ்வழக்கில் போலீஸாரிடம் சரணடைந்த அண்ணாமலைநகர் தெற்கிருப்பு சிவன்கோயில் தெருவைச் சேர்ந்த பட்டாபிராமன் (28), சிவமணி என்கிற மணிகண்டன் (30), சிவன்கோயில் தெருவைச் பத்தாயிரம் என்கிற வெங்கடேசன் (29), அண்ணாமலைநகர் மண்ரோட்டைச் சேர்ந்த கஜேந்திரன் (28) ஆகிய 4 பேர்  4 பேர், செப்.3-ம் தேதி இரவு சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் இவ்வழக்கில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்த, சென்னை கொரட்டூர் அண்ணாநகரில் தற்போது வாடகை ஆட்டோ ஓட்டி வரும், சிதம்பரம் அண்ணாமலைநகர் மண்ரோட்டைச் சேர்ந்த பாபு (32) என்பவரையும், அண்ணாமலைநகரில் கோழி கறிக்கடை வைத்துள்ள சிவன்கோயில் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (34) ஆகிய இருவரையும் தனிப்படை போலீஸார் செப்.6-ம் தேதி சனிக்கிழமை கைது செய்து  சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

தொடர்ந்து இவ்வழக்கில் செப்.8-ம் தேதி திருவாரூர் மணவாளநல்லூரைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (24) விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளியான சீர்காழி பணங்காட்டுத்தெருவைச் சேர்ந்த யானை கார்த்தி என்கிற கார்த்திகேயனை (31) அண்ணாமலைநகர் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்தியசிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் சிதம்பரம் மாரியாப்பாநகரில் வெடிகுண்டு வெடித்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சுரேந்தர் கடலூர் மத்திய சிறையில் கைதியாக உள்ளார். அவரிடமிருந்து கடந்த சில வாரங்கள் முன்பு போலீஸார் செல்போனை கைப்பற்றினர். தற்போது சிதம்பரம் இரட்டை கொலை வழக்கில் சிறையிலிருந்தபடி சதி திட்டம் தீட்டியதாக வழக்கில் சுரேந்தரை அண்ணாமலைநகர் போலீஸார் சேர்த்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் கடலூர் மத்தியசிறையில் உள்ள சுரேந்தர், புதன்கிழமை அன்று சிதம்பரம் நம்பர்-1 மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் மேற்கண்ட வழக்கில் ஆஜர்படுத்தப்பட்டு, காவல் நீட்டிப்பு செய்யப்பட்டார். மேலும் சுரேந்தர் 2011-ல் நடைபெற்ற அடிதடி வழக்கில் சப்கோர்ட்டிலும், கடந்த மே.3-ம் தேதி சிதம்பரம் மாரியாப்பாநகரில் வெடிகுண்டு வெடித்த வழக்கில் நம்பர்-1 மாஜிஸ்டிரேட் கோர்ட்டிலும் ஆஜர்படுத்தப்பட்டு காவல் நீட்டிப்பு செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.