விருதுநகர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் அனுமதியின்றி பேன்சிரக பட்டாசுகளை தயாரித்ததாக மேலாளரை போலீஸார் கைது செய்தனர். மேலும், ஆலை உரிமையாளர் மற்றும் மேற்பார்வையாளர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
விருதுநகர் பகுதியில் மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. இதில், குறிப்பிட்ட பட்டாசு ரகங்களுக்கு மட்டும் அனுமதி பெற்று விட்டு, அனுமதியின்றி பேன்சி ரக பட்டாசுகளை தயாரித்து வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ரகசிய தகவல் வந்தது. இதேபோல், விருதுநகர் அருகே காரிசேரி பகுதியில் தொழிலாளர்கள் விதிமுறை பின்பற்றாத ஆலை மீது உற்பத்திக்கு தடை விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இதை மீறி சட்டவிரோதமாக அருகில் கூடாரம் அமைத்து பேன்சிரக பட்டாசுகளை தயாரித்த போது வெடி விபத்து ஏற்பட்டது. இதில், சம்பவ இடத்திலேயே உடல் கருகி 2 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, அனுமதி பெறாத பட்டாசுகளை தயாரிக்கும் ஆலைகளில் அந்தந்த பகுதி விவகார எல்லைப்பகுதி காவல் நிலைய போலீஸார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்ய ஆட்சியர் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் காரிசேரி பகுதியில் மாவட்ட உரிமம் பெற்ற பட்டாசு ஆலையில் ஆய்வு செய்ய இக்குழுவினர் வந்துள்ளனர். இதைப் பார்த்த தொழிலாளர்கள் அறையில் இருந்து தப்பியோடினார்கள். உடனே அங்கு சென்ற அதிகாரிகள் எளிதில் தீப்பற்றக்கூடிய பேன்சி ரகங்களுக்கு பயன்படுத்தப்படும் 7 சாக்குகளில் இருந்த கலர் மணி மருந்து 25 கிலோ, 8 சாக்கு பைகளில் பச்சை மணி மருந்து கலவை 21 கிலோ, 3 சாக்கு பைகளில் மஞ்சள் மணி மருந்து கலவை 21 கிலோ மற்றும் முழுமையடையாத பேன்சி ரகங்களையும் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் வீரபத்திரன் ஆமத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் பட்டாசு ஆலையின் உரிமையாளர் காளிராஜ், முத்துலிங்காபுரத்தைச் சேர்ந்த மேற்பார்வையாளர் ராஜ்குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். ஆலை மேலாளர் தர்மலிங்கத்தை கைது செய்தனர். மேலும், ஆலையில் இருந்த பேன்சிரக பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் பல வண்ணங்களில் மணி மருந்துக் கலவைகளை பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.