ரயில்வே தொழிற்சங்க ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தம்: 10 ஆயிரம் ஊழியர்கள் ஒரு நாள் விடுப்பு; ரயில் சேவை பாதிக்கும் அபாயம்
ரயில்வே துறையில் அந்நிய நேரடி முதலீட்டை எதிர்த்து எஸ்.ஆர்.எம்.யூ. ரயில்வே தொழிற்சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஒரு நாள் வேலை நிறுத்த
ரயில்வே துறையில் அந்நிய நேரடி முதலீட்டை எதிர்த்து எஸ்.ஆர்.எம்.யூ. ரயில்வே தொழிற்சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக சென்னை ரயில்வே கோட்டத்தை சேர்ந்த 10 ஆயிரம் ஊழியர்கள் ஒரு நாள் விடுப்புக்கு விண்ணப்பித்துள்ளனர். இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ரயில் இஞ்ஜின் ஓட்டுநர்களும் பங்கேற்கின்றனர். இதன் காரணமாக வெள்ளிக்கிழமை புறநகர் மின்சார ரயில் சேவை பாதிப்படையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிவேக ரயில்கள் உள்பட சில முக்கியப் பகுதி வழித்தடங்களுக்கான திட்டங்களில் 100 சதவீதம் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
Advertisement
அரசு-தனியார் துறை பங்களிப்புடன் புறநகர் ரயில்பாதை திட்டங்கள், சேமிப்பு கிடங்கு, ரயில்வே கூடம், ரயில் பெட்டிகள் தயாரிப்பு, பராமரிப்பு வசதிகள், ரயில்வே மின் இணைப்புகள், சிக்னல் அமைப்பு, பயணிகள் முனையம், சரக்குகள் முனையம், ரயில்வே தொழில்துறைக்கான உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவற்றில் நேரடி அன்னிய முதலீடு அனுமதிக்கப்படும்.
ரயில்வேயின் சில முக்கியப் பிரிவுகளில் 49 சதவீதத்தையும் தாண்டி நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிப்பது தொடர்பான பரிந்துரைகள் பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவை குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்று அரசு தெரிவித்திருந்தது.
இந்த ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க விடுப்புக்கு விண்ணப்பித்த பல ஊழியர்களின் விடுப்பு அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால் அதையும் மீறி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.
தெற்கு ரயில்வே அலுவலகம் அமைந்துள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை மத்திய அரசை கண்டித்து ஊர்வலம் நடத்தப்படும். பின்பு, தெற்கு ரயில்வே பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே உயர் அதிகாரி கூறியது: இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தின் காரணமாக எக்ஸ்பிரஸ், புறநகர் ரயில் சேவையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. பயணிகளுக்கு எவ்வித தடையும் இல்லாமல் பயணங்கள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.