மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று பரப்புரை செய்யத் தயாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!
மத்திய அமைச்சர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுப்பிய கேள்வி பற்றி...
தமிழ்மண்ணில் நின்று மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று பரப்புரை செய்யத் தயாரா? என மத்திய அமைச்சர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமடைந்திருக்கும் நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று மத்திய அமைச்சர்கள் 6 பேர் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளனர்.
இந்த நிலையில், மத்திய அமைச்சர்களுக்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்து தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Advertisement
பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது:
”தமிழ்நாட்டுக்கு வரும் மத்திய பா.ஜ.க. அமைச்சர்களும் & பா.ஜ.க. முதலமைச்சர்களும் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்வார்களா?
1. தமிழ்மண்ணில் நின்று, "மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம்" என்று சொல்லி பரப்புரை செய்யத் தயாரா?
2. நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டுக்குத் தருவது எவ்வளவு? பா.ஜ.க.வால் ஆளப்படும் செல்லக்குழந்தை மாநிலங்களுக்குத் தருவது எவ்வளவு? வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா?
3. கிறிஸ்தவத் தொண்டு நிறுவனங்கள் மீது தாக்குதல் தொடுக்கும் எஃப்சிஆர்ஏ சட்டத்திருத்தத்தை முழுமையாகத் திரும்பப் பெறுவீர்களா அல்லது அடுத்த வாரமே நிறைவேற்றப் போகிறீர்களா?
4. இவற்றுக்கெல்லாம், பழனிசாமி அவர்களால் தனது தில்லி ஓனர்களிடம் பதில்பெற்றுத் தர முடியுமா?
5. கண்ணியமற்ற அவதூறுகளை வாந்தி எடுப்பதை விடுத்து, மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சினைகளை எப்போதுதான் பேசுவீர்கள்?
தமிழ்நாட்டைத் துண்டாட எத்தனை பேர் தில்லியில் இருந்து படையெடுத்து வந்தாலும், தமிழ்நாடு தலைகுனியாது!
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.