சிதம்பரம் அருகே வேன், மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இருவர் சாவு
புதுச்சேரியிலிருந்து புதன்கிழமை இரவு ராமேஸ்வரத்திற்கு வேன் ஒன்று புறப்பட்டது. இதில் 15-க்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில் சிதம்பரம் அருகே சி.முட்லூர் புறவழிச்சாலையை
சிதம்பரம் அருகே வியாழக்கிழமை அதிகாலை வேனும், மோட்டார் சைக்கிள், மின்டெம்போ ஆகிய மூன்று வாகனங்களும் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
புதுச்சேரியிலிருந்து புதன்கிழமை இரவு ராமேஸ்வரத்திற்கு வேன் ஒன்று புறப்பட்டது. இதில் 15-க்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில் சிதம்பரம் அருகே சி.முட்லூர் புறவழிச்சாலையை வேன் கடந்துள்ளது. அப்போது சிதம்பரம் பூதகேணி பகுதியைச் சேர்ந்த பாலாஜி (19), அவரது நண்பர் யாசின் (18), யாசினின் காதலியான சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த மீனா (18) ஆகிய மூவரும் வந்த மோட்டார் சைக்கிள் வேன் மீது மோதியது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த வேன் டயர் வெடித்து, எதிரே வந்த மின்டெம்போ மீது மோதி நின்றது. இவ்விபத்தில் மினிடெம்போவை ஓட்டி வந்த சென்னை தரமணியைச் சேர்ந்த சத்தியசீலன் (54) படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த பாலாஜி (19) சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த யாசின், மீனா, வேனில் பயணம் செய்த 6 பேரும் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், வேனில் பயணம் செய்த புதுச்சேரி வேல்ராம்பட்டைச் சேர்ந்த கலைச்செல்வன் (38) படுகாயம் அடைந்து புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கிள்ளை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.