திருவள்ளுவர் பல்கலைக்கழக கட்டணங்கள் உயர்வை குறைக்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ கோரிக்கை
திருவள்ளுவர் பல்கலைக்கழகம் உயர்த்தியுள்ள கல்வி கட்டணம், தேர்வு கட்டணம், மதிப்பெண் பட்டியல் கட்டணம் ஆகியவற்றை குறைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மத்தியக்குழு உறுப்பினர் கே.
திருவள்ளுவர் பல்கலைக்கழகம் உயர்த்தியுள்ள கல்வி கட்டணம், தேர்வு கட்டணம், மதிப்பெண் பட்டியல் கட்டணம் ஆகியவற்றை குறைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதம்: வேலூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் படித்தும் வரும் மாணவ, மாணவியர்களின் கல்வி கட்டணம், தேர்வு கட்டணம், மதிப்பெண் பட்டியல் கட்டணம், செய்முறைத் தேர்வு கட்டணம், விண்ணப்ப கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் வரம்பில்லாமல் 100 சதவீதத்திலிருந்து 150 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் உள்ள 150-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் சாதாரண தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக நிர்வாகம் கட்டணங்களை உயர்த்தியதோடு அல்லாமல், கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி தேதி 26-9-2014 என்றும் அறிவித்துள்ளது.
செப்.25-ம் தேதி கட்டணங்கள் உயர்வு செய்து, செப்.29-ம் தேதி கடைசி தேதி என பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது மாணவர்களை சங்கடப்படுத்தியுள்ளது. பாதிப்புள்ளாகியுள்ள மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே மாணவர்களின் நலன் கருதி உயர்கல்வித்துறை அமைச்சர் தலையிட்டு, கட்டண உயர்வை ரத்து செய்வதோடு, கட்டணம் செலுத்தும் கால அவகாசத்தை மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்து தர உத்தரவிட வேண்டும் என கடிதத்தில் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.