20 தமிழர்கள் சுட்டுக்கொலை: நெல்லையில் மறியல், ஆந்திர வங்கி முற்றுகை
ஆந்திர மாநிலத்தில் தமிழகத்தை சேர்ந்த 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து புதன்கிழமை பாளையங்கோட்டையில் வழக்குரைஞர்கள் திடீரென மறியலில் ஈடுபட்டனர். சந்திப்பில் உள்ள ஆந்திர வங்கியை முற்றுகையிட்ட நாம்தமிழர் கட்சியினர் 32 கைது செய்யப்பட்டனர்.
ஆந்திர மாநிலத்தில் தமிழகத்தை சேர்ந்த 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து புதன்கிழமை பாளையங்கோட்டையில் வழக்குரைஞர்கள் திடீரென மறியலில் ஈடுபட்டனர். சந்திப்பில் உள்ள ஆந்திர வங்கியை முற்றுகையிட்ட நாம்தமிழர் கட்சியினர் 32 கைது செய்யப்பட்டனர்.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்ட வனப்பகுதியிலிருந்து செம்மரக்கட்டை கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகத்தை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழர்கள் மீது கண்மூடித்தனமாக ஆந்திரப் போலீஸாரும், வனத்துறையினரும் தாக்குதல் நடத்தி 20 பேரை சுட்டுக் கொன்றிருப்பது வன்மையை கண்டிக்கத்தக்கது. இது குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஆந்திர அரசு மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து புதன்கிழமை பாளையங்கோட்டையில் நீதிமன்றம் முன்பு வழக்குரைஞர்கள் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதில் வழக்குரைஞர்கள் அரசு அமல்ராஜ், ஸ்ரீதர்ராஜன், குமார், நெளசாத் உள்பட 25 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வேளாண் பொறியாளர் தற்கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் தலைமை பொறியாளர் செந்தில், ஜாமீன் மனு விசாரணைக்கு வந்ததால் நீதி மன்ற வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.
இதனிடையே வழக்குரைஞர்கள் திடீரென மறியலில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. நீதிமன்றம் முன்பு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.
தகவலறிந்த மாநகர காவல் ஆணையர் சி. முருகன், நீதிமன்றத்திற்கு வருகை தந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார். ஆந்திர வங்கி முற்றுகை: இந்த சம்பவத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் சந்திப்பு பசும்பொன் முத்துராமலிங்கம் சிலை அருகில் உள்ள ஆந்திர வங்கியை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர்.
கட்சியின் தென்மண்டல அமைப்பாளர் க. சிவக்குமார் தலைமையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட அமைப்பாளர் ராம்குமார், மாநகர அமைப்பாளர் ச.ஆ. நயினார், மாநகர இளைஞர் பாசறை அமைப்பாளர் வே.ரா. செய்யதுஅலி, மாவட்ட செய்தி தொடர்பாளர் இரா. புவனேந்திரன் உள்பட 32 பேரை போலீஸார் கைது செய்தனர்.