காரைக்குடி அருகே டிப்பர் லாரி - பேருந்து நேருக்குநேர் மோதி விபத்து: 20 பேர் காயம்
காரைக்குடி அருகே தமிழ்நாடு அரசு விரைவுப்பேருந்தும், டிப்பர் லாரியும் சனிக்கிழமை காலையில் நேருக்குநேர்....
காரைக்குடி அருகே தமிழ்நாடு அரசு விரைவுப்பேருந்தும், டிப்பர் லாரியும் சனிக்கிழமை காலையில் நேருக்குநேர் மோதி எற்பட்ட விபத்தில் விரைவுப் பேருந்து நடத்துநர் உயிரிழந்தார். ஓட்டுநர் உள்பட 20 பேர் காயமடைந்தனர்.
சென்னையிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு காரைக்குடி அரசு விரைவுப்பேருந்து புறப் பட்டது. பேருந்தை முசிறி அருகேயுள்ள புதுப்பட்டி காலணியைச்சேர்ந்த ராமச்சந்திரன் (35) ஓட்டினார். நாமக்கல் மாவட்டம் தில்லைநத்தம் கிராமத்தைச்சேந்த குணசேகரன் (45)நடத்துநராக பணியிலிருந்தார்.
பேருந்து சுமார் 20 பயணிகளுடன் காரைக்குடி அருகே செட்டிநாடு பகுதியைக்கடந்து காரைக்குடி நோக்கி நான்குவழிச் சாலையில் வந்துகொண்டிருந்தது. காலை 6.10 மணி யளவில் நங்கப்பட்டி என்ற பகுதியில் எதிரே வந்த டிப்பர் லாரியும், பேருந்தும் நேருக்கு நேர் திடிரென மோதியது.இதில் பேருந்து முன்பகுதியில் இருந்த நடத்துநர் குணசேகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஓட்டுநர் படுகாயமடைந்தார். மேலும் பேருந்தில் பயணித்த 20 பயணிகளும் காயமடைந்தனர்.
Advertisement
சம்பவம் குறித்து அறிந்ததும் செட்டிநாடு காவல்நிலைய போலீஸார் நேரில் சென்று காயமடைந்த ஓட்டுநர் மற்றும் பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர். உயிரிழந்த நடத்துநர் குணசேகரனின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இவ்விபத்துகுறித்து செட்டிநாடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து டிப்பர் லாரி ஓட்டுநர் மதுரை மாவட்டம் மேலூர் அருகே சக்குடி கிராமத்தைசேர்ந்த முனியசாமி (28) என்ப வரை கைது செய்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.