முகப்பு
தற்போதைய செய்திகள்

சிறுவனுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் உதடு பிளவு சீரமைப்பு: நெல்லையில்  அரசு மருத்துவர்கள் சாதனை

பிறவியிலேயே பிளவுபட்ட உதடுகளுடன் பிறந்த ஒன்றரை வயது சிறுவனுக்கு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் சரி செய்யப்பட்டது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:15 AM
பகிர்:

பிறவியிலேயே பிளவுபட்ட உதடுகளுடன் பிறந்த ஒன்றரை வயது சிறுவனுக்கு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் சரி செய்யப்பட்டது.

அம்பாசமுத்திரம் வட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே கரம்பையை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். விவசாயி. இவரது மனைவி பேச்சியம்மாள். பீடிச்சுற்றுகிறார். இத்தம்பதிக்கு அருணாசலம், ஐயப்பன் என 2 ஆண் குழந்தைகள் உள்ளன. 2 ஆவது மகன் ஐயப்பன் பிறந்தபோது உதடுகள் இரு புறமும் பிளவுபட்ட நிலையில் அண்ணாக்கு, முன்தாடை நீட்டிக் கொண்டிருந்தது. ஐயப்பனின் இதயத்தின் கீழ்அறையில் சிறிய துவாரம் காணப்பட்டது.இந்த குறைபாடுகளால் ஐயப்பனின் முகத் தோற்றம் விகாரமாக தோற்றம் அளித்தது. தாய்ப் பால் குடிக்கும்போது புரையேறுதல், பேச்சாற்றல் இழந்து பாதிக்கப்பட்டிருந்தான்.

ஐயப்பனை பெற்றோர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அரசு மருத்துவமனையில் ஐயப்பனுக்கு முதல் கட்டமாக இருதயம் பாதி்ப்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.ஐயப்பனுக்கு பிளவுபட்ட உதட்டில் முன்னே நீட்டிக் கொண்டிருந்த முன்தாடை எலும்பு பகுதியை மருத்துவர்களின் ஆலோசனைபடி அழுத்தம் செய்து பின்னுக்கு தள்ளப்பட்டது. இதையடுத்து நவீன பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் சிறுவனுக்கு உதடு பிளவுகள் சரிசெய்யப்பட்டது.

திங்கள்கிழமை பாளையங்கோட்டையில் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் எல்.டி. துளசிராம் அளித்தப் பேட்டியில் கூறியதாவது:

ஒன்றரை வயதுள்ள ஐயப்பனுக்கு பிறவியிலேயே உதடுகள் பிளவுபட்ட நிலையில் முன்தாடை நீட்டிக் கொண்டிருந்தது. சிறுவனுக்கு இருதயத்தில் கீழ் அறையில் ஓட்டை காணப்பட்டது.முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் நவீன பிளாஸ்டிக் சர்ஜரி செய்து உதடு பிளவுகள் சீரமைக்கப்பட்டது. மார்ச் 10 ஆம் தேதி இந்த அறுவை சிகிச்சையினை பிளாஸ்டிக் சர்ஜரி மருத்துவர் டி. செந்தில்சிவமுத்து, மருத்துவர் ஆதில்அகமதுயாமின் ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் 3 மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

இதன் மூலம் சிறுவனின் மேல் உதடு, மூக்கு சரி செய்யப்பட்டு நீட்டிக் கொண்டிருந்த முன்தாடையும் எலும்பு அறுவை சிகிச்சை மூலம் பின்னுக்கு தள்ளப்பட்டது. இந்த சிகிச்சையின் பலனால் ஐயப்பன் குணமடைந்துள்ளான். 6 மாதங்களுக்கு பிறகு ஐயப்பனுக்கு எலும்பு அறுவை சிகிச்சை மூலம் மேல்தாடையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். இதன் பிறகு சிறுவன் முழுமையான பேச்சாற்றல் கிடைக்கும் என்றார் அவர்.

முழு கட்டுரையைப் படிக்க →