விருதுநகர் மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் 7.50 லட்சம் ஆதார் எண்கள் இதுவரையில் இணைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.
வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி உண்மையான விவரங்களை இணைக்கும் பணியை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்காக ஒவ்வொரு வீடு வீடாக கணக்கெடுப்பு பணி நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து விடுமுறை நாள்களில் அந்தந்த பகுதியில் உள்ள 1807 வாக்குச்சாவடி மையங்களில் இதற்கான சிறப்பு முகாமும் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் மொத்தம் உள்ள 14.91 லட்சம் வாக்காளர்களில் 7.50 லட்சம் பேரின் ஆதார் எண்கள், செல்லிட பேசி மற்றும் முழு விவரங்களையும் வாக்காளர் அடையாள அட்டையில் இணைப்பதற்காக பெறப்பட்டுள்ளது.
எனவே இதுவரையில் பெற்ற தகவல்களின் அடிப்படையில் வாக்காளர் பட்டியலுடன், ஆதார் எண் இணைக்கும் பணியை தேர்தல் பிரிவு அலுவலகத்தில் மும்முரமாக நடந்து வருகிறது. இப்பணியை விரைவில் நிறைவு செய்யும் வகையில் அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோர் மூலம் வீடு வீடாகவும் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும், அனைவரின் விவரங்களையும் இணைக்கும் வகையில் மீண்டும் மே.10, 24ம் தேதிகளில் சிறப்பு முகாம்களும் அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் நடத்தப்பட இருப்பதாக தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.