மணிமுத்தாறு அருவியில் மூழ்கி சென்னையை சேர்ந்த இருவர் பலி
திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அருவியில் ஞாயிற்றுக்கிழமை குளிக்க வந்த சென்னையை சேர்ந்த இளைஞர்கள் இருவர் தடாகத்தில் மூழ்கி இறந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அருவியில் ஞாயிற்றுக்கிழமை குளிக்க வந்த சென்னையை சேர்ந்த இளைஞர்கள் இருவர் தடாகத்தில் மூழ்கி இறந்தனர்.
சென்னை தாம்பரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் குண்சேகரன் (25). மென்பொருள் பொறியாளரான இவர் சோழிங்கநல்லூரில் தனியார் நிறுவனத்தில் பணி செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி 3 மாதம் ஆகிறது. இதே பகுதியை சேர்ந்தவர் சங்கர் மகன் சுரேஷ் (21). இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.இ. பொறியியல் பிரிவில் 3 ஆம் ஆண்டு பயின்று வந்தார்.
நாகர்கோவிலில் திங்கள்கிழமை நடைபெறவுள்ள நண்பரின் இல்லத் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக குணசேகரன், சுரேஷ் உள்ளிட்ட நண்பர்கள் சென்னையில் இருந்து காரில் நாகர்கோவிலுக்கு புறப்பட்டனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை திருநெல்வேலியில் நண்பர் ஒருவரை சந்தித்தனர். பின்னர் அவர்கள் மணிமுத்தாறு அருவி, குற்றாலம் அருவிகளில் குளித்து விட்டு இரவு நாகர்கோவில் செல்ல முடிவு செய்தனர். முதலில் மணிமுத்தாறு அருவியில் குளிப்பதற்காக வந்தனராம்.
அருவியில் குளித்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கால் தவறி அருவியை அடுத்துள்ள 80 அடி தடாகத்தில் சுரேஷ் விழுந்ததாக கூறப்படுகிறது. நீச்சல் தெரிந்த குணசேகரன், தடாகத்தில் சிக்கிய சுரேசை காப்பாற்ற முயன்றாராம். சுரேசை காப்பாற்றும் முயற்சியில் சுரேசுடன், குணசேகரனும் தடாகத்தில் சிக்கி கொண்டனர்.
தொடர் மழையால் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 2 வாரங்களாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை இருந்தது. வெள்ளம் குறைந்ததால் தற்போது குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அருவியில் நண்பர்களுடன் குளிக்க வந்த குணசேகரன், சுரேஷ் ஆகியோர் தடாகத்தில் மூழ்கினர். இருவரும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தகவலறிந்த கல்லிடைக்குறிச்சி போலீஸார், அம்பாசமுத்திரம் தீயணைப்பு படையினர் அருவி தடாகத்தில் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடியில் இருந்து முத்துக்குளிப்பவர்கள் வரவழைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.