விருதுநகர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் அனுமதியின்றி தயார் செய்து வைத்திருந்த 6800 கருந்திரிக்கட்டுக்களை பறிமுதல் செய்தும், அந்த பட்டாசு ஆலைகள் மீது மேல் நடவடிக்கை எடுக்க கோட்டாட்சியர் சுபா நந்தினி மாவட்ட வருவாய் அலுவலருக்கு பரிந்துரை செய்துள்ளார்.
விருதுநகர் வட்டார பகுதிகளில் எவ்வித அனுமதியில்லாமல் கூடாரம் அமைத்தும், தனியார் ஆலைகளிலும் பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரிகளை தயாரித்து வருவதாக ஆட்சியருக்கு தகவல் வந்துள்ளது. அதைத் தொடர்ந்து மேற்குறிப்பிட்ட பகுதிகளில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் சுபாநந்தினிக்கு வியாழக்கிழமை உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் விருதுநகர் அருகே ஓ.கோவில்பட்டி பகுதியில் கோட்டாட்சியர் தலைமையில் வருவாய்த்துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அப்பகுதியில் உள்ள தனியார் பட்டாசு ஆலை அருகே வருவாய் துறையினர் வருவதை அறிந்து கருந்திரி தயாரித்து துண்டாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் தப்பியோடினர்.
உடனே அந்த அறைக்கு விரைவாகச் சென்று பார்வையிட்ட போது கருந்திரிகளை தயாரித்து வைத்திருந்தனர். உடனே அங்கிருந்த 5600 கருந்திரி கட்டுக்களையும், அப்பகுதியில் மற்றொரு தனியார் பட்டாசு ஆலையிலும் தயார் செய்து வைத்திருந்த 1200 கருந்திரி கட்டுக்களையும் என மொத்தம் 6800 கட்டுக்களையும் வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர். அதன் பின்னர் அங்குள்ள மணற்பரப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி அழித்தனர்.
இது தொடர்பாக கோட்டாட்சியர் சுபாநந்தினி கூறுகையில், எவ்வித அனுமதியில்லாமல் சட்ட விரோதமாக கருந்திரிகளை தயார் செய்த பட்டாசு ஆலைகள் மீது மேல் நடவடிக்கை எடுக்க மாவட்ட வருவாய் அலுவலருக்கு பரிந்துரை செய்துள்ளதாக மட்டும் அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.