விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நெசவாளர் கூட்டுறவு உற்பத்தியாளர் சங்கங்களில் தேங்கியுள்ள ரூ.2.05 கோடியிலான வேட்டி, சேலைகளை அரசு கொள்முதல் செய்து நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.அர்ஜூனன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை ஆகிய வட்டார பகுதிகளில் உள்ள 73 நெசவாளர் கூட்டுறவு உற்பத்தியாளர் சங்கங்களில் 25 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இச்சங்கங்களின் மூலம் ஏழை எளிய மக்களுக்கான இலவச வேட்டி, சேலைகளை நெசவு செய்து வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, இச்ங்கங்களில் ரூ.2.05 கோடி அளவிற்கு வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்து தயார் நிலையில் வைத்துள்ளனர். இதை தமிழக அரசு கொள்முதல் செய்ய மறுத்து வருகிறது. இதனால் ஜவுளிகள் தேக்கமடைந்து நெசவாளர்கள் வேலைவாய்ப்பை இழந்து தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அவர்களது குடும்பம் பொருளாதார நெருக்கடிக்கும் ஆளாகியுள்ளனர். இதனால் நெசவாளர்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
2015-ம் ஆண்டில் துப்பட்டா ரகம் ஒதுக்கியதில் நெசவாளர்களுக்கு கடந்த ஆண்டை விட 2 மடங்கு குறைந்து கூலி ரூ.80 ஆக கிடைக்கிறது. எனவே தமிழக அரசும், கைத்தறிதுறையும் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் தேங்கியுள்ள ஜவுளிகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும். அதேபோல், துப்பட்டா ரகங்களுக்கு கூலி ரூ.300 ஆக உயர்த்தியும் வழங்கவும் வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.