ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் நெல்லையில் மறியல்: 153 பேர் கைது
ஊரக வளர்ச்சி இயக்கத்தில் 18 மற்றும் மாவட்டங்களில் 91 ஆக மொத்தமுள்ள 109 துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடங்களை, வட்டார வளர்ச்சி அலுவலர் நிலைக்கு உயர்த்த வேண்டும்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் திருநெல்வேலியில் வியாழக்கிழமை நடைபெற்ற சாலைமறியலில் பங்கேற்ற 153 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஊரக வளர்ச்சி இயக்கத்தில் 18 மற்றும் மாவட்டங்களில் 91 ஆக மொத்தமுள்ள 109 துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடங்களை, வட்டார வளர்ச்சி அலுவலர் நிலைக்கு உயர்த்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். கணினி உதவியாளர் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் உருவாக்கி இப்போது பணிபுரிபவர்களை அப் பணியிடங்களில் ஈர்ப்பதோடு, அனைத்து கணினி உதவியாளர்களுக்கும் குடும்ப நல நிதித்திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.
முழு சுகாதார ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஒரே சீரான மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் குடும்ப நல நிதித்திட்டத்தினை செயல்படுத்த வேண்டும். உதவிப் பொறியாளர்களுக்கு இணையான ஊதியத்தை வட்டாரப் பொறியாளர்களுக்கு வழங்க வேண்டும். நேரடி உதவியாளர்களுக்குப் பணி விதிகளை உருவாக்குதல் வேண்டும் என்பன உள்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாவட்டத் தலைவர் அ.சந்திரசேகரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் வெ.சண்முகசுந்தரம் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ஆறுமுகம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலர் பார்த்தசாரதி, மு.விநாயகசுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ராஜேஸ்வரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
தொடர்ந்து திருநெல்வேலி-மதுரை சாலையில் மறியல் செய்ய முயன்ற 11 பெண்கள் உள்பட 153 பேரை போலீஸார் கைது செய்தனர். மறியலையொட்டி திருநெல்வேலி நகரம் காவல் உதவி ஆணையர் கந்தசாமி தலைமையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.ஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.