விருதுநகர் மாவட்டத்தில் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சல்: 4 பேருக்கு தீவிர சிகிச்சை
விருதுநகர் பகுதியில் மர்ம காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பதால் 4 பேருக்கு அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை சேர்க்கப்பட்டு
விருதுநகர் பகுதியில் மர்ம காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பதால் 4 பேருக்கு அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டையைத் தொடர்நது, விருதுநகர் பகுதியிலும் காய்ச்சல் வேகமாக பரவுகிறது. இப்பகுதி சுற்றி உள்ள கிராமங்களைச் சேர்ந்த 28 பேர் வரையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில், சாத்தூர் அருகே மேட்டமலை பகுதியைச் சேர்ந்த மாரியம்மாளின் மகன் முத்துகார்த்திக்(7), விருதுநகர் அருகே சொக்கலிங்காபுரம் மணிமேகலையின் மகள் பாண்டிலட்சுமி(4), அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சரஜோவின் மகள் மங்களாதேவி(7), மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே குராயூர் கிராமத்தைச் சேர்ந்த சசிகலாவின் மகள் பாண்டீஸ்வரி(10) ஆகிய 4 பேருக்கு மர்ம காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து தீவிர மர்ம காய்ச்சல் பிரிவில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக தலைமை அரசு மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர். பிரகலாதன் கூறுகையில், இம்மருத்துவமனையில் காய்ச்சலுக்கான தனிப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தற்போது 28-பேர்கள் வரையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில், 4 பேருக்கு மர்ம காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பதாக தெரியவந்ததை தொடர்ந்து தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே காய்ச்சல் ஏற்பட்டால் உடனே அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தால் தான், அதன் தன்மை அறிந்து கிகிச்சை அளிக்க வசதியாக இருக்கும்.
Advertisement
மேலும், இப்பிரிவில் தொடர்ந்து 24 மணிநேரமும் கண்காணித்து சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதோடு, மருத்துவமனை வளாகப்பகுதியில் கொசுக்களை ஒழிக்கும் வகையில் ஜன்னல்களில் வளையும், கழிவு நீர் வாய்க்கால்களில் தெளிப்பு மருந்தும் தெளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.