பழனியருகே தாய், தந்தையை கொலை செய்த மகன் காவல் நிலையத்தில் சரண்
பழனி அருகே தாய் மற்றும் தந்தையை கொலை செய்த மகன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
பழனி அருகே தாய் மற்றும் தந்தையை கொலை செய்த மகன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
பழனி அருகே அத்திமரத்துவலசை சேர்ந்தவர் முருகேசன்(65). இவரது முதல் மனைவி ராமாத்தாள். இவர்களது மகன் ரகுநாதன்(45). ரகுநாதனின் சிறுவயதிலேயே தாயார் ராமாத்தாள் இறந்து விட்ட நிலையில் ராமாத்தாளின் தங்கை மயிலாத்தாளை(53) முருகேசன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். தற்போது ரகுநாதனுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகளுடன் அதே ஊரில் தனிக்குடித்தனம் வசித்து வருகிறார்.
ரகுநாதன், மயிலாத்தாள் தம்பதிக்கு சந்திரா என்ற மகள் உள்ளார். இவருக்கும் திருமணமாகி விட்டது. இந்நிலையில் முருகேசன் தனக்கு சொந்தமான 9 ஏக்கர் தோட்டத்தை சரிபாதியாக பிரித்து ஒருபகுதியை ரகுநாதன் குடும்பத்தாருக்கும், மற்ற பாதியை தனது குடும்பத்துக்கும் பிரித்து வைத்து விவசாயம் செய்து வருகின்றனர். ரகுநாதன் தோட்டத்துக்கு முருகேசனின் தோட்டம் வழியாக தண்ணீர் வரத்து இருந்துள்ளது. இதை வைத்துதான் தண்ணீர் பாய்ச்ச வேண்டியுள்ளது. இதனால் ரகுநாதனுக்கும், முருகேசனுக்கும் கடந்த இரு வருடங்களாக பிரச்னை இருந்துள்ளது.
அவ்வப்போது ஊரார் இவர்களது பிரச்சனையை தீர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் சனிக்கிழமை மாலை அத்திமரத்துவலசில் உள்ள முருகேசன் தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ரகுநாதன் சென்றுள்ளார். அப்போது பேச்சுவார்த்தை முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்த கடப்பாரையை எடுத்து ரகுநாதன் முருகேசனையும், மயிலாத்தாளையும் தாக்கியுள்ளார்.
இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலத்த காயமடைந்து இறந்து போயினர். இதைத் தொடர்ந்து ரகுநாதன் கீரனூர் காவல் நிலையத்துக்கு நேரில் சென்று இரண்டு பேரையும் கொலை செய்து விட்டதாக தெரிவித்து சரணடைந்தார். இது குறித்து கீரனூர் போலீஸார் ரகுநாதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.