சிதம்பரம் பாஜக பிரமுகர் கொலை வழக்கில் 2 மாதங்கள் கழித்து துப்புதுலங்கியது: மூவர் கைது
சிதம்பரத்தில் பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 மாதங்கள் கழித்து குற்றவாளி யார் என தெரியவந்து நகர போலீஸார் மூவரை சனிக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி
சிதம்பரத்தில் பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 மாதங்கள் கழித்து குற்றவாளி யார் என தெரியவந்து நகர போலீஸார் மூவரை சனிக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
சிதம்பரம் அனந்தீஸ்வரன்கோயில் அக்ரகாரம் மின்வாரியம் இறக்கத்தில் நாகச்சேரி குளம் பகுதியில் வசித்து வந்த பாஜக நகர பொதுச்செயலாளரான ஜி.வெங்கடேசன் (52) கடந்த நவ.22-ம் தேதி வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.இவருக்கு ராணி என்ற மனைவியும், விஜயக்குமார், சரவணன் என்ற மகன்களும் உள்ளனர். மனைவி மற்றும் மகன்கள் புதுச்சேரியில் வசித்து வருகின்றனர். ஜி.வெங்கடேசன் சவுண்ட் சர்வீஸ் வைத்து நடத்தி கொண்டு சிதம்பரத்தில் தனியாக வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக பிரமுகர் வெங்கடேசன் கொலை குறித்து நகர போலீஸார் வழக்குப் பதிந்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியும் துப்பு எதுவும் கிடைக்காமல் போலீஸார் திணறி வந்தனர். அவர் குடியிருந்த வீட்டின் மாடியில் தங்கியிருந்து உத்திரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் கொலைசெய்திருக்கலாம் என நகர போலீஸார் இன்ஸ்பெக்டர் அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் கடந்த வாரம் உத்திரபிரதேசம் சென்று விசாரணை செய்து துப்பு கிடைக்காமல் திரும்பி வந்தார்.
இந்நிலையில் பாஜக பிரமுகர் வெங்கடேசன் இறுதியாக செல்போனில் பேசிய நம்பர் யார் என்பது கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் சில தினங்கள் முன்பு போலீஸார் அந்த நம்பர் மீண்டும் செயல்பட தொடங்கியதால் யாருடையது என்பதை சைபர் கிரைம் மூலம் கண்டுபிடித்தனர். வெங்கடேசனிடம் கடைசியாக செல்போனில் பேசியது சிதம்பரம் அருந்ததியர்தெருவைச் சேர்ந்த சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் விக்னேஷ் (20) என்பது தெரியவந்து போலீஸார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
போலீஸார் விசாரணையில் விக்னேஷின் தாயார் லட்சுமிக்கும் (36), பாஜக பிரமுகர் வெங்கடேசனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தததாக தெரியவருகிறது. கள்ளத்தொடர்பு விபரம் அறிந்த மகன் விக்னேஷ், தனது நணபர்களான அருந்ததியர் தெருவைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சர்மா (20), செங்கோட்டை (20) ஆகியஇருவருடன் சேர்ந்து சம்பவத்தன்று வெங்கடேசன் வீட்டிற்கு சென்று கொலை செய்தது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து நகர போலீஸார் விக்னேஷ் (20), சர்மா (20), செங்கோட்டை (20) ஆகிய மூன்று பேரை கைது சிதம்பரம் நீதிமன்றத்தில் சனிக்கிழமை இரவு ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.