தமிழகம் முழுவதும் பிப்.4-ல் ஒருநாள் விடுப்பு போராட்டம்: நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் முடிவு
17-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பிப்.4-ம் தேதி ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தை தமிழ்நாடு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் நடத்துகிறது என அச்சங்க
17-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பிப்.4-ம் தேதி ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தை தமிழ்நாடு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் நடத்துகிறது என அச்சங்க பொதுச்செயலாளர் கோ.ஜெயசந்திரராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சிதம்பரத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களிடையே தெரிவித்தது:
தமிழகம் முழுவதும் 33.975 நியாயவிலைக்கடைகள் உள்ளன. இதில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் 1420 கடைகளும், மகளிர் சுய உதவிக்குழுக்கள் நடத்தும் 534 கடைகள் அடங்கும். கடலூர் மாவட்டத்தில் மட்டும் 1287 நியாயவிலைக் கடைகள் உள்ளன.
நியாயவிலைக் கடையிலேயே பொருள்களை எடையிட்டு வழங்காமல், இருப்பு குறைவிற்கு அபராதம் விதிக்கும் போக்கை கைவிட வேண்டும், சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், நியாயவிலைக்கடை திட்டப்பணிகள் அனைத்து கணினி மயமாக்க வேண்டும், அரிசி உள்ளிட்ட அனைத்து பொருள்களையும் பொட்டலமாக வழங்க வேண்டும், தமிழகஅரசு அமைத்துள்ள ஊதியக்குழுவில் எங்கள் சங்கத்தின் கோரிக்கைகளையும் பரிசீலிக்க வேண்டும் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிறோம். இந்திய மாநில அரசு பணியாளர் மகாசம்மேளன பொதுச்செயலாளர் கு.பாலசுப்பிரமணியன் தலைமையில் அண்மையில் சென்னையில் கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் ஊதிய உயர்வு வழங்குவதற்காக 7 பேர் கொண்ட கமிட்டி கூடுதல் பதிவாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 17-ம் அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற பிப்.4-ம் தேதி அன்று ஒருநாள் மட்டும் மாநிலம் முழுவதும் நியாயவிலைக்கடை பணியாளர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். மேலும் அன்றை தினம் மாவட்ட தலைநகரங்களில் ஆட்சியர் அலுவலர் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என கோ.ஜெயசந்திரராஜா தெரிவித்தார்.