கல்வி உதவித் தொகை வழங்கக் கோரி மாணவர்கள் ஆட்சியரிடம் மனு
இடைநிற்றலை தவிர்க்கும் வகையில் பள்ளிகளில் வழங்கப்படும் கல்வி ஊக்கத் தொகையை வழங்க வலியுறுத்தி மாணவ, மாணவிகள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை நேரில் மனு அளித்தனர்.
இடைநிற்றலை தவிர்க்கும் வகையில் பள்ளிகளில் வழங்கப்படும் கல்வி ஊக்கத் தொகையை வழங்க வலியுறுத்தி மாணவ, மாணவிகள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை நேரில் மனு அளித்தனர்.
இது தொடர்பாக எம்.ரெட்டியபட்டி அரசு மே்ல்நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் ஆட்சியர் வே.ராஜாராமனிடம் நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: விருதுநகர் மாவட்டம், எம்.ரெட்டியபட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் கடந்த 2012-2013ம் ஆண்டில் பிளஸ்2 மாணவர்கள் 200 பேர் படித்து முடித்து வெளியேறிச் சென்றனர்.இவர்களுக்கு பள்ளிகளில் இடைநிற்றலை குறைக்கும் வகையில் 10 மற்றும் 11ம் வகுப்பு படிப்போருக்கு ரூ.1500ம், பிளஸ்2 வகுப்புக்கு ரூ.2000ம் ஆண்டுதோறும் கல்வி ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.இத்தொகை மாணவ, மாணவிகள் பிளஸ்2 வகுப்பை முடித்து வெளியேறியதும் அவரவர் வங்கி கணக்குகளில் இத்தொகை வரவு வைக்கப்படும். ஆனால், இப்பள்ளியில் படித்து 2 ஆண்டுகள் முடிந்தும், இதுவரையில் மாணவ, மாணவிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படாமலே இருந்து வருகிறது.
இதேபோல், பக்கத்து கிராமங்களில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு கல்வித் ஊக்கத் தொகை அவரவர் வங்கி கணக்குகள் மூலம் விடுவிக்கப்பட்டுள்ளன. ஆனால், இப்பள்ளியில் படித்தவர்களுக்கு மட்டுமே வழங்குவதற்கு தாமதம் செய்து வருவதாக கூறி ஆட்சியரிடம் நேரில் அளித்த மனுவில் மாணவ, மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் இடைநிற்றலை குறைப்பதற்காக ஆண்டுதோறும் குறிப்பிட்ட அளவு தொகை, பிளஸ்2 முடித்து வெளியேறிச் செல்லும் போது மாணவ, மாணவிகளின் வங்கி கணக்குகளில் விடுவிக்கப்படும். இதற்கான அனைத்து விவரங்களும் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளன.
Advertisement
தற்போது, இத்தொகை கிடைக்கப்பெறாதவர்களின் விவரங்கள் ஒவ்வொரு பள்ளிகளிலும் சேகரிக்கப்பட்டு மீண்டும் மத்திய மனிதவள மேம்பாட்டு துறைக்கு அனுப்பி வைக்கப்பட இருப்பதாகவும், அதனால் விரைவில் மாணவ, மாணவிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.