கடை வாடகை உயர்வு: நெய்வேலி நகரியத்தில் முழு கடையடைப்பு
கடை வாடகை உயர்வை கண்டித்து நெய்வேலி நகரிய தொழில் வணிக சங்க கூட்டமைப்பினர் திங்கள்கிழமை ஒருநாள் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தினர். காலை 6 மணி முதல் இரவு 12 மணிவரையில் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கடை வாடகை உயர்வை கண்டித்து நெய்வேலி நகரிய தொழில் வணிக சங்க கூட்டமைப்பினர் திங்கள்கிழமை ஒருநாள் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தினர். காலை 6 மணி முதல் இரவு 12 மணிவரையில் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
நெய்வேலி நகரிய பகுதியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இவைகளை நெய்வேலி நகரிய நிர்வாகம் வாடகைக்கு விட்டு வருவாய் ஈட்டி வருகிறது. 1.7.2014 முதல் வாடகையை என்.எல்.சி நிர்வாகம் உயர்த்தியது.
இதுதொடர்பாக 2014 ஆகஸ்ட், செப்டம்பர் மாத்தில் நெய்வேலி நகரிய தொழில் வணிக சங்க நிர்வாகிகள், என்.எல்.சி நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்தினராம். இதில், வாடகை உயர்வு கூடாது, கடை பெயர் மாற்றம், வாரிசு உரிமம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்தும் பேச்சு நடத்த வேண்டும் என தொழில் வணிக சங்க கூட்டமைப்பு வலியுறுத்தியிருந்தனராம்.
இந்நிலையில், தற்போது உயர்த்தப்பட்ட வாடகையை செலுத்த வேண்டும் எனவும், 1.7.2014 முதல் 31.5.15 வரையிலான நிலுவை வாடகையை ஒவ்வொரு மாத வாடகையுடன் சேர்த்து வழங்க வேண்டும் என என்.எல்.சி நிர்வாகம் நோட்டீஸ் அளித்துள்ளதாக தெரிய வருகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட நெய்வேலி நகரிய தொழில் வணிக சங்க கூட்டமைப்பினர் திங்கள்கிழமை கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர். போராட்டத்தால், மருந்து, உணவகம் உள்ளிட்ட அனைத்து வகை கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. அரசு மற்றும் கூட்டுறவு சங்க கடைகள் மட்டும் திறந்திருந்தன.
கடை அடைப்பு போராட்டத்தால் நெய்வேலி நகரிய மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர். வெளியூர் பயணிகள் உணவு மற்றும் தேநீர் கிடைக்காமல் அவதி அடைந்தனர்.