பாளையங்கோட்டையில் மாம்பழச்சங்க பண்டிகை: கிறிஸ்தவர்கள் பேரணி
மாம்பழச் சங்கப் பண்டிகையையொட்டி பாளையங்கோட்டையில் கிறிஸ்தவர்கள் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாம்பழச் சங்கப் பண்டிகையையொட்டி பாளையங்கோட்டையில் கிறிஸ்தவர்கள் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தென்னிந்திய திருச்சபையின் (சி.எஸ்.ஐ.) திருநெல்வேலி திருமண்டில தோத்திர பண்டிகை மாம்பழச்சங்கப் பண்டிகை என்ற பெயரில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 235 ஆவது மாம்பழச் சங்கப் பண்டிகை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.இதையொட்டி பாளையங்கோட்டை மிலிட்டரி லைன் ஆலயத்தில் அருள்பணியாளர்கள் நினைவு தோத்திர ஆராதனை நடைபெற்றது. மறைந்த மிஷனரிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பின்பு தென்னிந்திய திருச்சபையின் திருநெல்வேலி திருமண்டில பேராயர் ஜெ.ஜெ.கிறிஸ்துதாஸ் தலைமையில் பேரணி நடைபெற்றது.
மிலிட்டரிலைனில் தொடங்கிய பேரணி தெற்கு கடைவீதி, லூர்துநாதன் சிலை சந்திப்பு வழியாக நூற்றாண்டு மண்டபத்தை அடைந்தது. அங்கு சிறப்பு ஆராதனை, மாணவர்-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.பேரணியில் தென்னிந்திய திருச்சபையின் கீழ் உள்ள கல்வி நிலையங்கள், பல்வேறு தொண்டு நிறுவனங்கள், அமைப்புகள் சார்பில் விழிப்புணர்வு வாகனங்கள் வலம் வந்தன. ஆசிரியைகள், மாணவர்கள் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பேரணியில் கலந்துகொண்டார்கள்.
புதன்கிழமை (ஜூலை 15) காலை 10 மணிக்கு நூற்றாண்டு மண்டபத்தில் வைத்து நற்கருணை ஆராதனை நடைபெற உள்ளது. கர்நாடக திருமண்டல பேராயர் பிரசன்னகுமார் சாமுவேல் தேவசெய்தி வழங்குகிறார். மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வரும் சி.எஸ்.ஐ. கிறிஸ்தவர்கள் ஏழைகளுக்கு அரிசி மற்றும் காணிக்கை அளித்து செல்வார்கள்.
வியாழக்கிழமை (ஜூலை 16) காலை 10 மணிக்கு பாளையங்கோட்டை தூய திரித்துவ பேராலயத்தில் 235 ஆவது தோத்திர ஆராதனை நடைபெறுகிறது. இதில் சி.எஸ்.ஐ. கிறிஸ்தவர்கள் தங்களது ஒருநாள் ஊதியத்தை காணிக்கையாகப் படைத்து வழிபாடு நடத்த உள்ளனர்.