கங்கைகொண்டான் அருகே விவசாயி வெட்டிக்கொலை
திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் அருகே விவசாயி செவ்வாய்க்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் அருகே விவசாயி செவ்வாய்க்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகேயுள்ள மானங்காத்தான் தெற்குத் தெருவைச் சேர்ந்த தங்கதுரை மகன் ஐசக் (40). இவருக்கு திருமணமாகி பாப்பா என்ற மனைவியும், ஆல்வின், ஜேம்ஸ், ஷாம் ஆகிய மகன்களும், ஷிபா என்ற மகளும் உள்ளனர். இவருக்குச் சொந்தமான தோட்டம் கங்கைகொண்டான் அருகே மேட்டுபிராஞ்சேரி கிராமத்தில் உள்ளது. அங்கு செல்வதாக கூறிவிட்டு திங்கள்கிழமை சென்ற ஐசக் வீடு திரும்பவில்லையாம். இதுகுறித்து கயத்தாறு காவல் நிலையத்தில் பாப்பா புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் தேடி வந்தனர்.
இந்தநிலையில் மேட்டுபிராஞ்சேரியில் உள்ள அவரது தோட்டத்தின் கிணற்றில் அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் ஐசக் சடலமாகக் கிடந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. தகவலறிந்ததும் கங்கைகொண்டான் காவல் நிலைய ஆய்வாளர் பிரதாபன், தாழையூத்து காவல் உதவி கண்காணிப்பாளர் ராஜாராம் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வா.விக்ரமனும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்.