முகப்பு
தற்போதைய செய்திகள்

திருச்சியில் காவல் உதவி ஆய்வாளர்,தலைமை காவலர் மீது தாக்குதல்

திருச்சி புத்தூர் அருகே உய்யக்கொண்டான் கரையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளர் மற்றும் தலைமை காவலரை தாக்கிய கும்பலை

Updated On : 24 ஜூன், 2015 at 3:36 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 11:19 AM

திருச்சி புத்தூர் அருகே உய்யக்கொண்டான் கரையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளர் மற்றும் தலைமை காவலரை தாக்கிய கும்பலை போலீஸார் தேடிவருகின்றனர்.

புத்தூர் அருகே உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு அரசு மருத்துவமனை காவல் நிலைய உதவி ஆய்வாளர் அழகர் சாமி,நுண்ணறிவுப் பிரிவு காவலர் செந்தில் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை அவர்கள் மறித்தனர். ஆனால் ஆட்டோவில் இருந்த கும்பல் நிறுத்தாமல் வேகமாக சென்றது. இதைத்தொடர்ந்து உதவி ஆய்வாளர் அழகர் மற்றும் நுண்ணறிவு பிரிவு காவலர் செந்தில் ஆகியோர் அந்த ஆட்டோவை விரட்டிச் சென்று குழுமாயி அம்மன் கோயில் அருகே  ஆட்டோவை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

பின்னர் ஆட்டோவில் இருந்த 5 பேரையும் கீழே இறங்குமாறு அவர்கள் கூறியுள்ளனர். இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல்,காவல் உதவி ஆய்வாளர் அழகர்சாமியையும், நுண்ணறிவுப் பிரிவு காவலர் செந்திலையும் தாக்கிவிட்டு சென்றுள்ளனர்.

Advertisement

இதில் பலத்த காயமடைந்த அவர்கள், காவல் உயர் அதிகாரிகளுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தப்படி, அந்தக் கும்பலை இருசக்கர வாகனத்தில் விரட்டிச் சென்றனர். சீனிவாச நகர் அடுத்த கனரா வங்கி காலனிக்குள் நுழைந்த ஆட்டோ பஞ்சராகியது. இதையடுத்து அந்த கும்பல் ஆட்டோவை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓட்டினர். இதற்கிடையே அங்கு வந்த உயர் அதிகாரிகள்,பலத்த காயத்துடன் இருந்த அந்த காவலர்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதைத்தொடர்ந்து காவல் உயர் அதிகாரிகள் அந்த ஆட்டோவை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில், அந்த ஆட்டோ பொன்மலை அருகேயுள்ள பென்னேரி புரத்தை சேர்ந்த சவுகர் அலி என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸார் சவுகர் அலியை பிடித்து,மேற்கொண்ட விசாரணையில், அவரது ஆட்டோவை,அவரது மைத்துனர் காதர் என்பவர் ஓட்டி வந்தது தெரியவந்தது. இதையடுத்து காதரை போலீஸார் தேடிவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.