விருதுநகர் அருகே குடிநீர் பிரச்னையை தீர்க்கவும், குடிநீர் குழாய் பதிக்கும் பணியினையும் மேற்கொள்ள வலியுறுத்தியும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக வச்சக்காரப்பட்டி கிராம மக்கள் சார்பாக பொன்னுச்சாமி ஆட்சியர் வே.ராஜாராமனிடம் நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது வச்சக்காரப்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சியில் 7 கிராமங்கள் உள்ளன. இதில் வச்சக்காரப்பட்டி கிராமத்தில் குடிநீர் வசதியின்றி கடந்த மூன்றரை ஆண்டுகளாக பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். மேலும், குடிநீர் தேவைக்கு கிராமத்திற்கு ஒதுக்குபுறத்தில் உள்ள கை அடி பம்பில் பிடித்து பயன்படுத்தி வருகிறோம். அதுவும், நீர் சுரப்புக்கு காத்திருந்து பிடிக்க வேண்டிய சூழ்நிலையிருக்கிறது.
இதைக் கருத்திற்கொண்டு ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் அக்கரார்பட்டி பாலத்தின் மேற்புரத்தில் ஆழ்குழாய் அமைத்து மேல்நிலைத் தொட்டி மூலம் குடிநீர் கொண்டு வருவதற்காக ரூ.4.10 லட்சம் ஒதுக்கியது. தற்போது, மேல்நிலை தொட்டி பணிகள் முடிந்து 3 ஆண்டுகளாகியும் இதுவரையில் சிரமப்படும் எங்கள் கிராமத்திற்கு குடிநீர் தர ஊராட்சி தலைவர் மறுத்து வருகிறார். இக்கிராமத்திற்கு குடிநீர் கொண்டு வருவதற்காக ரூ.15 லட்சத்தில் குழாய் பதிக்கும் பணியையும் மேற்கொள்ளாமல் வேண்டும் என்றே காலதாமதம் செய்கிறார்.
எனவே அரசு உத்தரவுப்படி அக்கரார்பட்டி பாலத்தின் மேற்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணற்றிலிருந்து குடிநீர் வழங்குவதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆட்சியரிடம் அளித்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.