பாஜகவைக் கண்டித்து ராமதாஸ் ஆர்ப்பாட்டம்
நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, பாமக நிறுவனர் ராமதாஸ் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, பாமக நிறுவனர் ராமதாஸ் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
பாமக சார்பில் வள்ளுவர் கோட்டம் அருகில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தை ராமதாஸ் தொடங்கி வைத்து பேசியது:-
பாஜக அரசு கொண்டு வந்துள்ள நிலம் கையகப்படுத்துதல் சட்ட திருத்த மசோதாவை கடுமையாக எதிர்க்கிறோம். இது தேவை இல்லாத சட்டத் திருத்தம். இதற்காக அவசர சட்டம் கொண்டு வந்து நிறைவேற்ற முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது.
நாடெங்கும் இதற்கு எதிர்ப்பு எழும்பியுள்ளது. இந்த சட்டத்தைக் கொண்டு வந்தால் கிராம மக்கள் குறிப்பாக விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுவர். இந்த மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும்.
நல்ல அம்சங்களுடன் திருத்தங்கள் கொண்டு வந்தால் ஓரளவு திருப்தி அடைவோம் என்றார் ராமதாஸ்.
பின்னர், ராமதாஸிடம், பாஜக கூட்டணியில் நீடிக்கிறீர்களா என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த ராமதாஸ், மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் நீடிக்கிறோம். மாநிலத்தில் நாங்கள் முதல்வர் வேட்பாளரை அறிவித்து இருக்கிறோம். எங்கள் தலைமையில்தான் கூட்டணி அமையும் என்றார்.