எல்லை தாண்டுவோரை சுடும் பாவச் செயலை இலங்கை செய்யாது - இலங்கை அமைச்சர்
கடலில் எல்லை தாண்டிவரும் மீனவர்களை துப்பாக்கியால் சுடும் பாவச் செயலை இலங்கை அரசு செய்யாது, எனினும் சுடுவதற்கான சட்டம் இருப்பதையும் நினைவில்
கடலில் எல்லை தாண்டிவரும் மீனவர்களை துப்பாக்கியால் சுடும் பாவச் செயலை இலங்கை அரசு செய்யாது, எனினும் சுடுவதற்கான சட்டம் இருப்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் என்றார் இலங்கை அரசின் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்.
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலுக்கு இலங்கை இந்து சமய, மறுவாழ்வுத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்ய வந்தார்.
மூலவர் ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர், ஸ்ரீ பிரணாம்பிகை மற்றும் தனி சன்னதிகொண்டிருக்கும் ஸ்ரீ சனீஸ்வரபகவானை தரிசனம் செய்த அவர், செய்தியாளர்களிடம் கூறியது :
இந்திய மற்றும் இலங்கை அரசுகளிடம் எல்லை தாண்டுவோர் தண்டிக்கும் சட்டங்கள் உள்ளன. எல்லை தாண்டி வருவோரை சுடுவோம் என நானோ எங்களது அரசோ கூறவில்லை. அனைவரும் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். அந்தந்த நாட்டின் எல்லையை காப்பது அந்தந்த நாடடின் கடமையாகும். இதை செய்யும்போது அந்நியர் எல்லைக்குள் நுழைந்தால் சுடுவதற்கு ஒவ்வொரு நாட்டிலும் சட்டம் உள்ளது. இதைத்தான் கூறுகிறோமே தவிர, இந்திய மீனவர்கள் இலங்கைக்கு வந்தால் சுடுவோம் என கூறவில்லை. அந்த பாவச் செயலை இலங்கை அரசு செய்யாது.
எல்லை தாண்டுவோரை தண்டிக்க இருக்கும் சட்டத்தின்படி நடவடிக்கை எடுப்போம். இருக்கும் தண்டனையை குறைக்கவோ, மாற்றவோ முடியாது. இலங்கையில் புதிய அரசு அமைந்துள்ளது. நாங்கள் ஜனநாயக ரீதியில் செயலாற்ற விரும்புகிறோம். இலங்கையில் தமிழர்கள், சிங்களர்கள் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழவேண்டுமென்பதே எங்கள் அரசின் கொள்கை.
இந்திய மீனவர்கள் பிரச்னை குறித்து இந்திய பிரதமர் நரேந்திரமோடியும், இலங்கை அதிபர், பிரதமரும் பேசிவருகின்றனர். இரு அரசுகளும் இணைந்து பிரச்னைக்கு தீர்வு காணும். குறிப்பாக இந்திய பிரதமர் நல்ல முடிவை எடுப்பார் என்றார் இலங்கை அமைச்சர்.