திருக்குறள் ஒப்புவிக்கும் மாணவர்கள் பாராளுமன்றத்தில் கௌரவிக்கப்படுவார்கள்: தருண்விஜய் எம்.பி.
திருக்குறள் ஒப்புவிக்கும் மாணவர்கள் பாராளுமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு கௌரவிக்கப்படுவார்கள் என்றார் தருண்விஜய் எம்.பி.
திருக்குறள் ஒப்புவிக்கும் மாணவர்கள் பாராளுமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு கௌரவிக்கப்படுவார்கள் என்றார் தருண்விஜய் எம்.பி.
உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் தருண்விஜய் திருக்குறள், பாரதியார் மற்றும் தமிழ் பண்பாடு குறித்து நாடாளுமன்றத்தில் பேசி வருகிறார். இந்நிலையில், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை நடந்த நடராஜர் கோவில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்றார். பின்னர், கடலூர் வந்த தருண்விஜய் எம்.பி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
தமிழ் மிகத்தொன்மையான வரலாற்று பாரம்பரியம் கொண்ட மொழி. தாய்மொழியை மதிப்பது என்பது தேசத்தை மதிப்பது போன்றதாகும். திருவள்ளுவரின் திருக்குறளும், பாரதியாரும் இந்தியா முழுவதும் அறிந்துக் கொள்ளப்பட வேண்டியவர்களாவர். இதனைக் கருத்தில் கொண்டு 10 லட்சம் இளைஞர்களிடம் திருக்குறளை கொண்டுச்செல்லும் வகையில் பாக்கெட் அளவிலான திருக்குறள் புத்தகம் அச்சிடப்பட்டு வழங்கப்படுகிறது.திருக்குறளில் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு சொல்லப்பட்டுள்ளது. மேலும், திருக்குறளில் சகிப்புத்தன்மை, தீய எண்ணங்களை நீக்கும் கருத்துக்களும் பரவிக்கிடக்கிறது. இதனை இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் எடுத்துச் செல்ல வேண்டும்.
தமிழ் மொழியை அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள எனது இல்லத்தில் தமிழை கற்பிக்கும் பயிற்சியளித்து வருகிறேன். மேலும், இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள உத்தரகாண்டில் கங்கை நதியை பார்க்கும் வகையில் திருவள்ளுவர் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். லட்சம், லட்சம் சுற்றுலாப்பயணிகள் வருகைத்தரும் உத்தரகாண்டில் திருவள்ளுவர் சிலை அமைப்பது தமிழை அனைவரும் அறிந்துக் கொள்ளும் செயலாகும்.
அசோகர் மட்டுமே இந்திய வரலாறு அல்ல. ராஜராஜசோழன், சேர, சோழ, பாண்டியர்கள், திருவள்ளுவர், பாரதியார், ஆண்டாள், கண்ணகி ஆகியோரையும் சேர்த்தால் மட்டுமே இந்திய வரலாறு முழுமைப்பெறும். இவர்கள் குறித்து வட இந்திய மாணவர்கள் பெரும்பாலும் அறிந்திருக்கவில்லை.
எனவே, மோடி அரசு முதல்முறையாக திருவள்ளுவர், பாரதியின் வாழ்க்கை வரலாற்றை வட இந்திய பள்ளிகளில் மாணவர்கள் படிக்கும் வகையில் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது, தமிழை வட இந்திய மாணவர்கள் தெரிந்துக்கொள்ள உதவும். திருக்குறளை மேலும் பரப்பும் விதமாக திருக்குறளுக்கான மாணவர், இளைஞர் அமைப்பு (எஸ்.ஒய்.டி) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் தமிழக ஒருங்கிணைப்பாளராக கரூர் ராம.சுப்பிரமணியன் செயல்படுகிறார். இந்த அமைப்பு சென்னை பல்கலைக்கழகத்துடன் இணைந்து கோடை விடுமுறைக்குப் பின்னர் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியை நடத்தும். இதில், தேர்ந்தெடுக்கப்படும் 133 மாணவர்களை புதுதில்லிக்கு அழைத்துச் சென்று நாடாளுமன்றத்தின் உள்ளே வைத்து கௌரவம் செலுத்தப்படும் என்றார்.