நீர்பிடிப்பு பகுதியில் மழை: அடவிநயினார் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 12 அடி உயர்வு
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அடவிநயினார் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 12 அடி உயர்ந்து
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அடவிநயினார் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 12 அடி உயர்ந்து வியாழக்கிழமை 35 அடியாக இருந்தது.
திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கோடை மழை தொடர்ந்து பெய்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியி்ல் பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.வியாழக்கிழமை காலை 8 நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): பாபநாசம் அணை 36, பாபநாசம் கீழ் அணை 12, சேர்வலாறு அணை 9, மணிமுத்தாறு அணை 8.2, ராமநதி அணை 4, கருப்பாநதி அணை 23, குண்டாறு அணை 4, அடவிநயினார் அணை 24, நம்பியாறு அணை 6, கன்னடியன் அணைக்கட்டு 19.
திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் 6, சேரன்மகாதேவி 23, திருநெல்வேலி 33, பாளையங்கோட்டை 37, தென்காசி 4.8, செங்கோட்டை 6, ஆய்க்குடி 3.2, ஆலங்குளம் 1.6, ராதாபுரம் 29, சங்கரன்கோவில் 29, சிவகிரி 45,தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் 5.
நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 315.51 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு 94 கனஅடியும், கடனாநதி அணைக்கு 15 கனஅடியும், ராமநதி அணைக்கு 40 கனஅடியும், கருப்பாநதி அணைக்கு விநாடிக்கு 41 கனஅடியும், அடவிநயினார் அணைக்கு விநாடிக்கு 65 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.
நீர்மட்டம் உயர்வு:
அடவிநயினார் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 12 அடி உயர்ந்து 35 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 42 அடியாகவும், பாபநாசம் அணையின் நீர்மட்டம் 70 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 83.14 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 83 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 55.90 அடியாகவும், கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 1.64 அடி உயர்ந்து 40.03 அடியாகவும், குண்டாறு அணையின் நீர்மட்டம் 15.40 அடியாகவும், வடக்குப் பச்சையாறு அணையின் நீர்மட்டம் 23 அடியாகவும், நம்பியாறு அணையின் நீர்மட்டம் 13.02 அடியாகவும், கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 2.50 அடியாகவும் இருந்தது.
குடிநீர் மற்றும் பாசனத் தேவைக்காக பாபநாசம் அணையிலிருந்து 304.75 கனஅடியும், மணிமுத்தாறு அணையிலிருந்து 120 கனஅடியும், கடனாநதி, ராமநதி அணைகளில் இருந்து தலா 10 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.