செம்மர கடத்தலில் தொடர்புடைய டிஎஸ்பி முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு
செம்மர கடத்தல் வழக்கில் தொடர்புடைய வேலூர் கலால் டிஎஸ்பி தங்கவேலு முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செம்மர கடத்தல் வழக்கில் தொடர்புடைய வேலூர் கலால் டிஎஸ்பி தங்கவேலு முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வேலூர் மாவட்டம் மாதனூர் அருகே பாலூர் கிராமத்தை சேர்ந்த பாமக பிரமுகர் சின்னபையன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 4 நபர்களை கைது செய்து விசாரணை நடத்தியதில் அது செம்மர கடத்தல் பிரச்சனை காரணமாக நடந்த கொலை என்பது தெரியவந்தது. மேலும் செம்மர கடத்தலில் தொடர்புடைய வேலூரை சேர்ந்த நாகேந்திரன் - ஜோதிலட்சுமி தம்பதியினர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 8 டன் செம்மர கட்டைகள், ரூ.32 இலட்சம் ரொக்கம், 3 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் இருவரிடமும் நடத்திய விசாரணையில் செம்மர கடத்தலில் வேலூர் கலால் பிரிவு டிஎஸ்பி தங்கவேலு மற்றும் 4 போலீஸôருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் டிஎஸ்பி தங்கவேலு தலைமறைவானார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தனிப்படை போலீஸôர் நடத்தி வரும் விசாரணையில் பல்வேறு பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகிறது.
சாராய ஒழிப்பு சோதனைக்காக சென்றபோது நாகேந்திரன் - ஜோதிலட்சுமி தம்பதியினரின் வீட்டில் நடந்த சோதனையில் செம்மரங்கள் இருப்பது தெரியவந்ததாகவும், அது வெளியில் தெரியாமல் இருக்க தம்பதியிடம் டிஎஸ்பி தங்கவேலு பணம் பெற்றதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து செம்மர கடத்தல் தொழில் டிஎஸ்பி தங்கவேலு உதவியுடன் பாதுகாப்பாக நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சாராய வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை செம்மர கட்டைகளை கடத்தும் தொழிலில் டிஎஸ்பி தங்கவேலு ஈடுபடுத்தினாராம். மேலும் செம்மரங்களை வெட்டுவதற்கு தேவைப்படும் ஆட்களாக சாராய காய்ச்சும் தொழிலாளர்களை அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.
Advertisement
தலைமறைவான டிஎஸ்பி தங்கவேலு செம்மர கடத்தல் தொழிலில் ஈடுபட்டது உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிந்தே நடந்ததாகவும், உயர் போலீஸார் அதிகாரிகளுக்கும் அதில் தொடர்பு இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. அதனால் அவரை காப்பாற்றும் முயற்சியில் காவல் துறை அதிகாரிகளே ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இருந்தபோதிலும் தனிப்படை போலீஸார் சென்னையில் முகாமிட்டு பல்வேறு இடங்களில் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் அவர் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.