ஜாதி பற்றுடன் செயல்படும் காவல்துறையினர் மீது நடவடிக்கை தேவை: தி.வேல்முருகன்
ஜாதி பற்றுடன்செயல்படும் காவல்துறையினர் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
ஜாதி பற்றுடன்செயல்படும் காவல்துறையினர் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் திங்கட்கிழமையன்று கடலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: கடலூர் குமளங்குளத்தில் பாமக பிரமுகர் ராஜா என்பவர் மர்மமான முறையில் இறந்துள்ளார். இதற்கு தவாகவினர் தான் காரணம் என்று பாமகவினர் குற்றம்சாட்டுகின்றனர். அவரது சடலத்தை வைத்து அரசியல் நடத்துவதோடு, அரசுக்கு நெருக்கடியும் கொடுக்கின்றனர். இதனை காவல்துறையில் ஜாதி பற்றுடன் செயல்படும் சில காவல்துறை அதிகாரிகள் ஆதரித்து வருகின்றனர்.
அதே நேரத்தில் இறந்த ராஜாவின் மகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேறு ஜாதியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார். இதற்கு பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அந்த நெருக்கடியை ராஜாவின் மீது செலுத்தியதே அவரது மரணத்திற்கு காரணம். எனவே, ராஜாவின் மரணம் குறித்தி சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும்.
தமிழக வாழ்வுரிமை கட்சியைச் சேர்ந்த மேல்பட்டாம்பாக்கத்தைச் சேர்ந்த மோகன்ராஜ், என்எல்சி ஒப்பந்த தொழிலாளர் செல்வகுமார், ஆர்ச்கேட்டைச் சேர்ந்த அறிவழகன், காரைக்காடு பேபி, குடிக்காடு விஜயா ஆகியோர் பல்வேறு காரணங்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களது கொலைகள்குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
ராஜாவின் மரணம் குறித்து விசாரிப்பதற்காகச் சென்ற போலீஸார் தவாகவினரின் வீடுகளை சூறையாடியதோடு, பெண்களை அச்சுறுத்தி வருகின்றனர். எனவே, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இப்பிரச்னையில் தலையிட்டு உரிய விசாரணை நடத்த வேண்டும். இல்லையெனில் காவல்துறைக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
அதேப்போன்று காவல்துறையில் ஜாதிய பற்றுடன் செயல்படும் காவல் அதிகாரிகள் மீது தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் சென்னையில் டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று கூறினார்.