2 குழந்தைத்திருமணம் தடுத்து நிறுத்தம்: ஆட்சியரிடம் அளித்த புகாரில் நடவடிக்கை
ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெறவிருந்த 2 குழந்தைத் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெறவிருந்த 2 குழந்தைத் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
கடலூர் மாவட்டம் கம்மாபுரத்தைச் சேர்ந்த கொளஞ்சி மகன் ஆனந்த்(27). சிங்கப்பூரில் எலக்ட்ரிசனாக வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கும் கம்மாபுரம் அருகே உள்ள தேவன்குடியைச் சேர்ந்த 17 வயது இளம்பெண்ணிற்கும் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோயிலில் வியாழக்கிழமை திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதுகுறித்த தகவல் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமாருக்கு புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, விருத்தாசலம் வட்டாட்சியர் முரளி, கம்மாபுரம் விரிவாக்க அலுவலர் சகாயபுளோராமேரி, ஊர்நல அலுவலர் பொற்செல்வி மற்றும் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், இத்தகவல் உண்மையென்பது தெரிய வந்ததும் கோயில் அலுவலர்களுடன் பேசி திருமணத்திற்கான ஏற்பாடுகளை நிறுத்தினர். மேலும், விசாரணையில் அதேக்கோயிலில் வியாழக்கிழமையன்று மற்றொரு குழந்தைத் திருமணம் நடக்கவிருந்ததும் தெரிய வந்தது. திட்டக்குடி அருகே உள்ள கொட்டாக்குறிச்சியைச் சேர்ந்த பச்சைமுத்து மகன் கோவிந்தராசு(26). வெளிநாட்டில் வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கும் விருத்தாசலம் கோ.மங்கலத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவிக்கும் திருமணம் நடைபெற உள்ளதும் தெரிய வந்தது. இதனையடுத்து 2 திருமணத்திற்கான ஏற்பாடுகளையும் நிறுந்துமாறு கோயில் நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டது.
மேலும், அக்குடும்பத்தினரிடமும் சென்று திருமண ஏற்பாடுகளை நிறுத்துமாறு கூறினர். இதனையடுத்து, அவர்களும் திருமண ஏற்பாடுகளை நிறுத்தினர். பின்னர், இருதரப்பினரும் கடலூரில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்திற்கு வியாழக்கிழமை அழைத்து வரப்பட்டனர். அதில், 18வயது நிரம்பாத பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றமென சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் தே.ராஜேஷ்கண்ணா விளக்கமளித்தார். பின்னர், இருபெண்களும் அங்குள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு மனநல ஆலோசனை வழங்கப்பட்டது.