தூத்துக்குடியில் மாணவர்களுக்கிடையே கத்திக்குத்து: 2 பேர் மருத்துவமனையில் அனுமதி
தூத்துக்குடியில் அரசுப்பேருந்தில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு மாணவர்கள் கத்திக்குத்து காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் அரசுப்பேருந்தில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு மாணவர்கள் கத்திக்குத்து காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி அருகே உள்ள கோவங்காடு பகுதியைச் சேர்ந்த அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தூத்துக்குடி நகர பேருந்தில் இன்று பள்ளிக்கு வந்துள்ளனர். அப்போது மற்றொரு தனியார் பள்ளி மாணவர்களும் அந்த பேருந்தில் வந்துள்ளனர்.
9 ஆம் வகுப்பு படித்து வரும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கத்திக்குத்து கலவரமாக ஏற்பட்டுள்ளது. இதில் முள்ளக்காடு கிராமத்தைச் சேர்ந்த பாக்கியராஜ் மகன் பொன் திவாகர்(15), பாலகிருஷ்ணன் மகன் ரவிந்திர ராஜ்(16) ஆகிய இருவருக்கும் கத்திக்குத்தால் காயமடைந்தனர்.
காயமடைந்த இரு மாணவர்களும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக 4 மாணவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.