முகப்பு
தற்போதைய செய்திகள்

புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை குழந்தைகளிடம் ஊக்குவிக்க வேண்டும்: முதல்வர்

புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை குழந்தைகளிடம் ஊக்குவிக்க வேண்டும். இதன் மூலம் கல்வி, கலாசாரம் உள்ளிட்டவை தொடர்பாக

Updated On : 16 டிசம்பர், 2016 at 3:46 PM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:26 AM

புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை குழந்தைகளிடம் ஊக்குவிக்க வேண்டும். இதன் மூலம் கல்வி, கலாசாரம் உள்ளிட்டவை தொடர்பாக அறிந்து கொள்ளலாம் என முதல்வர் வி.நாராயணசாமி வலியுறுத்தி உள்ளார்.

புதுச்சேரி கூட்டுறவு புத்தக சங்கத்தின் சார்பில் 20 வது தேசிய புத்தக கண்காட்சி வேல்சொக்கநாதன் திருமண நிலையத்தில் வெள்ளிக்கிழமை துவங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் இப்புத்தக கண்காட்சியில் லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு இடம் பெற்றுள்ளன. 

90 புத்தக நிறுவனங்கள் பங்கேற்றுள்ள இந்த புத்தக கண்காட்சியை முதல்வர் நாராயணசாமி குத்துவிலக்கேற்றி துவங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கூட்டுறவுத் துறை சார்பில் நடைபெறும் தேசிய புத்தக கண்காட்சியில் உலக புகழ் பெற்ற புத்தகங்களும்,தலை சிறந்த எழுத்தாளர்களின் படைப்பும்,கல்வி சார்ந்த மென் பொருள் குறுந்தகடுகளும், தகவல் தொழில்நுட்ப உபகரணங்களும்  இடம்பெற்றுள்ளன.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை  அனைத்து வயதினருக்கும், ஆண்கள் பெண்கள் போன்றவர்களுக்கும் தனி  தனியான புத்தக வகைகளும் உள்ளன. இக்கண்காட்சியின் சிறப்புகளாக கணிப்பொறி வழி கற்றல் உபகரணங்கள், கல்விசார்ந்த மென்பொருள் தகடுகள், தகவல் தொழில்நுட்ப உபகரணங்களும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. ஒரு லட்சத்திற்கும் அதிகமான தமிழ் ஆங்கிலம் பிரெஞ்ச் இந்தி மற்றும் பிறமொழி நூல்கள் இடம் பெற்றுள்ளன.

புத்தகம் ஒருவரது நண்பனாக விளங்குபவை. குழந்தைகள் மத்தியில் புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். இதன் மூலம் பண்டைய வரலாறு, கலாசாரம், ஆன்மீகம், விளையாட்டு, விஞ்ஞானம் தொடர்பாக பரந்த ஞானத்தை பெற முடியும்.

பல்வறு துறைகளில் ஞானங்களை மக்கள் வளர்த்து கொள்ளவேண்டும். சமூக சிந்தனைகள் கலாச்சாரம் போன்றவை வளர்க்கவே இது போன்ற புத்தக கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. சட்ட மேதை அம்பேத்கர் நூல்கள், ஆன்மீக நூல்களை கண்காட்சியில் வாங்கி உள்ளேன் எனவும் தெரிவித்தார்.

அமைச்சர் மு.கந்தசாமி, பேரவை துணைத் தலைவர் விபி.சிவக்கொழுந்து, கூட்டுறவு பதிவாளர் எஸ்.சிவக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர். கூட்டுறவு சங்கத் தலைவர் சீனு.ராமச்சந்திரன், துணைத் தலைவர் பாஞ்.ராமலிங்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.

கடந்த ஆண்டு கண்காட்சியில் ரூ.70 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனை ஆகின. நிகழாணஅடு ரூ.1 கோடி வரை புத்தகங்கள் விற்பனை ஆகும் என எதிர்பார்க்கிறோம் என செயலாளர் முருகன் தெரிவித்தார்.

வார நாள்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.45 மணி வரையும், விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 8.45 வரையும் கண்காட்சி நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.