முகப்பு
தற்போதைய செய்திகள்

கூடன்குளம் அணுஉலை குறித்து அதிமுக, திமுக தங்களது நிலைபாட்டை அறிவிக்க வேண்டும்: சுப. உதயகுமாரன்

கூடன்குளம் அணுஉலை குறித்து அதிமுக, திமுக கட்சிகள் தங்களது நிலைபாட்டை அறிவிக்க வேண்டும். ஒரு மாதத்தில் தெரிவிக்கவில்லை எனில் மார்ச் 8 முதல் சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என கூடன்குளம் அணுஉலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமாரன் தெரிவித்தார்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:28 PM
பகிர்:

கூடன்குளம் அணுஉலை குறித்து அதிமுக, திமுக கட்சிகள் தங்களது நிலைபாட்டை அறிவிக்க வேண்டும். ஒரு மாதத்தில் தெரிவிக்கவில்லை எனில் மார்ச் 8 முதல் சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என கூடன்குளம் அணுஉலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமாரன் தெரிவித்தார்.

திருநெல்வேலியில் திங்கள்கிழமை அவர் அளித்தப் பேட்டி: பச்சைத் தமிழகம் கட்சி சார்பில் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கான குழுவினர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து பிற மாவட்டங்களுக்கும் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படும்.

கெயில் திட்டத்திற்கு தமிழகத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் விளை நிலங்கள் வழியாக பூமிக்கடியில் குழாய் பதிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  இது இந்திய ஒருமைபாட்டுக்கு ஊறு விளைவிக்கும் செயலாகும். கூட்டாட்சித் தத்துவத்தை சீர்குலைக்கும். இத்திட்டத்துக்கு எதிராக போராடும் 7 மாவட்ட விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளோம்.

கூடன்குளத்தில் 7 மாதங்கள் பராமரிப்பு பணிகள் மேற்கொண்ட பிறகு மின்சாரம் உற்பத்தி தொடங்கிய நிலையில் 3 தினங்களில் மீண்டும் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. நீராவி குழாய்களில் கசிவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 7 மாத பராமரிப்புக்கு பிறகும் ஏன் கசிவு ஏற்படுகிறது. இதுகுறித்து நிர்வாகம் குழப்பமான தகவலை தெரிவித்து வருகிறது.

இந்த விஷயத்தில் கூடன்குளம் நிர்வாகம், அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம், மத்திய அரசு மெத்தனமாக செயல்பட்டு வருகிறது. தரமற்ற, பாதுகாப்பற்ற சூழலில் அணுஉலை இயங்கி வருவதால் தமிழகம் மற்றும் கேரளாவில் 12 கோடி மக்களுக்கு அச்சுறுத்தல் இருந்து வருகிறது. கூடன்குளம் அணுஉலைகள் தொடர்பாக தமிழகத்தில் அரசியல் கட்சிகளை சந்தித்து  தெரிவித்தோம். அதிமுக, திமுக ஆகிய இரு பெரிய கட்சிகளும் கூடன்குளம் அணுஉலை குறித்து இதுவரை கருத்துத் தெரிவிக்கவில்லை.

முதல், 2 ஆவது அணுஉலைகளை நிரந்தரமாக மூட வேண்டும். 3,4 ஆவது அணுஉலைகளை திறக்கக் கூடாது. அணுஉலைக்கு எதிராக போராடியவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். இதுகுறித்து அதிமுக, திமுக தங்களது கட்சியின் நிலைபாட்டை ஒரு மாதத்தில் அறிவிக்க வேண்டும்.

இல்லையெனில், இவ்விரு கட்சிகளும் தங்களது கருத்தை தெரிவிக்க வலியுறுத்தி  மார்ச் 8 ஆம் தேதி முதல் சென்னையில் கூடன்குளம் அணுஉலைக்கு எதிரான கூட்டமைப்பு சார்பில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருப்போம். மக்களின் வாக்குகள் வேண்டும், ஆட்சி, அதிகாரம் வேண்டும். ஆனால் மக்களின் உயிரை மதிக்காமல் செயல்படுவது ஏற்புடையதல்ல. தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்.

கூடன்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து வலுவாக நடத்த  உள்ளோம். இதில் எந்த சமரசமும் இல்லை. அடுத்த கட்டமாக அரசியல் களத்திற்கு வந்துள்ளோம். பச்சைத் தமிழகம் கட்சி சார்பில் மக்களை சந்திப்போம்.

தமிழகத்தில் நிலவும் காவிரி டெல்டா பிரச்னை, கெயில் திட்டம், கல்பாக்கம் அணுஉலை, நியூட்ரினாத் திட்டம் போன்ற மக்களுக்கு எதிரான பிரச்னைகள் குறித்து  மாநிலம் முழுவதும் இயக்கங்கள் நடத்தவும் முடிவு செய்துள்ளோம் என்றார் அவர்.பேட்டியின்போது, பச்சைத் தமிழகம் கட்சியின் திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டி. சிரில்அல்போன்ஸ், ஒருங்கிணைப்பாளர்கள் உடனிருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →