முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள் தொடர் வேலைநிறுத்தம்!

திருநெல்வேலி மாவட்டத்தில் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கூட்டுறவு பணியாளர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினர்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:32 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கூட்டுறவு பணியாளர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினர்.

அனைத்து கூட்டுறவு வங்கி பணியாளர்கள், ரேசன்கடை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு கருணை ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினர்.

அமைப்பின் மாநில பொதுச்செயலர் க. முத்துபாண்டியன் கூறியதாவது: கூட்டுறவு வங்கிப் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக அரசு குழு அமைத்து 4 ஆண்டுகளாகியும் எந்த நடவடிக்கையும் இல்லை. கோரிக்கையை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் இம்மாதம் 1 ஆம் தேதி அந்தந்த மாவட்டத் தலைநகரில் பேரணி நடைபெற்றது.

கோரிக்கை குறித்து அரசு தரப்பில் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதனையடுத்து திங்கள்கிழமை முதல் தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கப் பணியாளர்கள், ரேசன்கடைப் பணியாளர்கள், ஓய்வுபெற்ற கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இப்போராட்டத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் 160 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள், 583 ரேசன்கடை பணியாளர்கள் கலந்து கொண்டனர். கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றார் அவர்.

கோரிக்கையை வலியுறுத்தி வண்ணார்பேட்டை மத்திய கூட்டுறவு வங்கி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை அகில இந்திய அரசு அலுவலர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் இரா. சீத்தாராமன் தொடங்கி வைத்தார். அனைத்து கூட்டுறவு ஓய்வுபெற்ற பணியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் ஏ.பி. சிவசுப்பிரமணியன், டெக்சஸ் அமைப்பின் மாநில அமைப்புச் செயலர் பத்மராஜ் மற்றும் அமைப்பின் நிர்வாகிகள் உள்பட 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →