முகப்பு
தற்போதைய செய்திகள்

அரசு கல்லூரியில் விடுதிகள் மூடல்: நெல்லையில் பொறியியல் மாணவர்கள் முற்றுகை

திருநெல்வேலியில் அரசு பொறியியல் கல்லூரியில் விடுதி மூடப்பட்டதை கண்டித்து புதன்கிழமை அக்கல்லூரி மாணவர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:47 PM
பகிர்:

திருநெல்வேலியில் அரசு பொறியியல் கல்லூரியில் விடுதி மூடப்பட்டதை கண்டித்து புதன்கிழமை அக்கல்லூரி மாணவர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் சோலார் மின்விளக்கை உடைத்து சேதப்படுத்தியதாக அக்கல்லூரியில் விடுதியில் தங்கி பயிலும் 650 மாணவர்களுக்கு தலா ரூ. 2000 வீதம் கல்லூரி நிர்வாகம் அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து கல்லூரி மாணவர்கள் 100 க்கும் மேற்பட்டோர் திருநெல்வேலி-நாகர்கோவில் பிரதான சாலையில் கல்லூரி முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரத்து செய்யப்பட்டது. ஆனால் 2, 3 ஆம் ஆண்டு மாணவர்களை விடுதியில் இருந்து வெளியேறுமாறு கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு: கல்லூரி விடுதியில் தங்கி பயின்று வரும் 2 ஆம் ஆண்டு, 3 ஆம் ஆண்டு மாணவர்கள் செவ்வாய்க்கிழமை கல்லூரியில் சோலார் மின்விளக்குகளை சேதப்படுத்தியதற்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை ரத்து செய்யுமாறு வலியுறுத்தி விதிகளுக்கு புறம்பாக கல்லூரி முன்பு திரண்டும், சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எனவே மாணவர்கள் தங்கியிருக்கும் 2 ஆம் ஆண்டு (வைகை இல்லம்) 3 ஆம் ஆண்டு (பொருணை இல்லம்) ஆகிய விடுதிகளை செவ்வாய்க்கிழமை (மார்ச் 15) பிற்பகல் முதல் காலவரையின்றி மூட முடிவுசெய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரத்து செய்யப்படுகிறது.

மாணவர்கள் செலுத்திய அபராதத் தொகை அவர்களின் விடுதி உணவுக் கட்டணத்தில் ஈடுசெய்யப்படும். எனவே 2 ஆம் ஆண்டு, 3 ஆம் ஆண்டு மாணவர்கள் உடனடியாக விடுதியினை காலி செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதி மூடப்பட்டதால், பல்வேறு பகுதியில் இருந்து விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் செவ்வாய்க்கிழமை இரவு உணவு அருந்த முடியாத நிலை ஏற்பட்டதாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.

கல்லூரி நிர்வாகத்தின் இந்த முடிவை கண்டித்து புதன்கிழமை திருநெல்வேலியில் ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆட்சியர் அலுவலக புகார் பெட்டியில் மனு அளித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →