முகப்பு
தற்போதைய செய்திகள்

11, 12 -ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தில் மாற்றம்: தலைமைஆசிரியர் சங்கம் வரவேற்பு

பள்ளிக்கல்வியில் 11 மற்றும் 12 -ஆம் வகுப்புகளுக்கான பாட்டத்திட்டம் வரும் ஆண்டில் மாற்றம் செய்யப்படும்

Updated On : 24 ஜனவரி, 2024 at 6:41 PM
பகிர்:

புதுக்கோட்டை,

பள்ளிக்கல்வியில் 11 மற்றும் 12 -ஆம் வகுப்புகளுக்கான பாட்டத்திட்டம் வரும் ஆண்டில் மாற்றம் செய்யப்படும் என்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்புக்கு தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் வரவேற்றுள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் மாநிலத்தலைவர் முனைவர் சாமி. சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை: 11 மற்றும் 12 -ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தில் அடுத்த ஆண்டு முதல் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அனுமதிக்குப்பிறகு திருத்தி அமைக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் க. பாண்டியராஜன் அறிவித்துள்ளது வரவேற்புக்குரியது.

சுமார் 12 ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருந்த இந்தப் பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டுமென தொடர்ந்து தமிழக அரசை வலியுறுத்தி வந்த நிலையில் அமைச்சரின் இந்த அறிவிப்பை  தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் வரவேற்பதுடன், பாராட்டுக்களையும் தெரிவிக்கிறது.

 புதிய பாடத்திட்ட மாற்றங்களால்  மட்டுமே தேசிய அளவிலான மருத்துவ நுழைவுத் தேர்வு (நீட்) மற்றும்  பல்வேறு போட்டித் தேர்வுகளில்  தமிழக மாணவர்கள் வெற்றி பெற வழிவகுக்கும். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் உடல்நலம் பெற்று  1000-க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர்கள் நேரடி நியமனத்துக்குரிய போட்டித்தோ்வு குறித்தும்,  ஆசிரியர் தகுதி தேர்வு  குறித்தும், 34- முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் 30- க்கும் மேற்பட்ட மாவட்டக்கல்வி அலுவலர்கள் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்தும், 4,265- ஆய்வக உதவியாளர்கள் பணிநியமனம் குறித்தும், புதிய கல்விக்கொள்கையில் தமிழகத்தின் உறுதியான இறுதி முடிவு குறித்தும், அனைத்து பள்ளிகளுக்கும் தேவையான கணினிகளுடன் வை-பை வசதியுடன் நேரடி இணைப்பு வழங்குவது மற்றும் துப்புரவாளர்  நியமனம் போன்ற கல்வித்துறையின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் நல்ல முடிவுகளை அறிவிக்க நடவடிக்கை எடுத்து  தமிழகம் கல்வியில் சிறந்து விளங்க வழிவகை காண வேண்டுமென அதில் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →