தில்லி மெட்ரோவில் தினந்தோறும் 50-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள்!
தில்லி மெட்ரோவில் நிகழாண்டில் சராசரியாக தினந்தோறும் 52-க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவ வழக்குகள் பதிவாகி உள்ளதாக மாநிலங்களவையில் தகவல் அளிக்கப்பட்டது.
தில்லி மெட்ரோவில் நிகழாண்டில் சராசரியாக தினந்தோறும் 52-க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவ வழக்குகள் பதிவாகி உள்ளதாக மாநிலங்களவையில் தகவல் அளிக்கப்பட்டது.
இதுதொடர்பான கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் அளித்துள்ள பதிலின் விவரம்:
நிகழாண்டு மார்ச் 15 ஆம் தேதி வரையில் தில்லி மெட்ரோ ரயிலில் 3,854 திருட்டு வழக்குகள் பதிவாகி உள்ளன. இதன்படி, தினந்தோறும் சராசரியாக 52-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் பதிவாகி உள்ளன. கடந்த ஆண்டு முழுவதும் மொத்தமாக 9, 705 திருட்டு வழக்குகள் பதிவாகின. இந்த எண்ணிக்கை 2015-இல் 3,104 ஆக இருந்தது. 2014-இல் 2,211 திருட்டு வழக்குகள் பதிவாகின என தில்லி போலீஸார் சேகரித்து அளித்துள்ள தகவலின் மூலம் தெரிய வருகிறது.
இணையவழி மூலம் முதல் தகவல் அறிக்கை பதிவிடுவது, திருட்டு வழக்குகளை உண்மையாக பதிவு செய்தல், பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற காரணங்களால்தான் இந்த திருட்டு சம்பவ வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று ஹன்ஸ்ராஜ் கங்காராம் தெரிவித்துள்ளார்.