துணைநிலை ஆளுநர் கிரண்பேடி செயல்பாடுகளைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தலைமை தபால் நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறறது.
தனிக் கணக்கு தொடங்குவதற்கு முன்பு இருந்த கடன் தொகை ரூ.2300 கோடியை தள்ளுபடி செய்ய வேண்டும், மாநில வளர்ச்சிக்கு தடையின்றி நிதி வழங்க வேண்டும், தனி மாநில அந்தஸ்து தர வேண்டும்.
ஆளுநர் மாளிகையில் கலாசார நிகழ்ச்சி என்ற பெயரில் வகுப்புவாத சக்திகளின் கூட்டங்கள் நடப்பதைத் தடுக்க வேண்டும், மத்திய அரசுக்கு புதுவைக்கு வறட்சி நிவாரணத்தை உடனே வழங்க வேண்டும், துணைநிலை ஆளுநர் அதிகார வரம்பு மீறி செயல்படக்கூடாது உள்ளிட்டவற்றை வலியுறுத்தி ஆளுநர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சி மாநிலக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில செயலாளர் ஆர்.விஸ்வநாதன் தலைமை தாங்கினார். தேசியக்குழு உறுப்பினர் நாரா.கலைநாதன், மாநில பொருளாளர் விஎஸ்.அபிஷேகம், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கே.முருகன், து.கீதநாதன், தினேஷ் பொன்னையா, அமு.சலீம், சேதுசெல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.