புதுச்சேரி: புதுவையில் சிறுமிகளை கடத்தி வைத்து பாலியல் வன்கொடுமை செய்த 3 ஆட்டோ டிரைவர்களுக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை ஆண்மை பரிசோதனை நடைபெற்றது.
புதுச்சேரி ரயில் நிலையம் அருகே உள்ள சில வீடுகளில் சிறுமிகளை அடைத்து வைத்து பாலியல் தொழில் நடப்பதாக ஒதியஞ்சாலை காவல் நிலையத்துக்கு ரகசிய தகவல் வந்தது.
கடந்த ஏப்ரல் மாதம் அங்கு சென்று சோதனை மேற்கொண்ட போலீஸார் 4 சிறுமிகளை மீட்டனர். பின்னர் அவர்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சுனில்குமார் கெளதம் உத்தரவிட்டார். அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே 4 சிறுமிகளிடம் இச்சம்பவம் தொடர்பாக குற்றவியல் நீதிபதி வாக்குமூலம்
பெற்றார். இந்நிலையில் அவர்களை பாலியல் ரீதியில் வன்கொடுமை புரிந்தவர்களை அடையாளம் காணும் முயற்சியில் சிபிசிஐடி முழுவீச்சில் இறங்கியது.
புதுவை மற்றும் கோட்டக்குப்பம் பகுதியைச் சேர்ந்த முகமது கனி, முஸ்தபா, முகமது அலி உள்ளிட்ட 3 ஆட்டோ டிரைவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களை சிபிசிஐடி போலீஸார் தேடி வருகின்றனர்.
இதனிடையே கைதான 3 ஆட்டோ டிரைவர்களுக்கும் ஆண்மை பரிசோதனை செய்ய சிபிசிஐடி முடிவு செய்தது. இதற்காக நீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி பெற்றனர்.
இந்நிலையில் பிற்பகல் 3 பேரையும் பலத்த பாதுகாப்புடன் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிபிசிஐடி போலீஸார்அழைத்து வந்தனர். அங்கு அவர்களுக்கு ஆண்மை பரிசோதனை நடந்தது. அதன்பிறகு ஆட்டோ டிரைவர்களை மீண்டும் காலாப்பட்டு சிறையில் போலீசார் அடைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.