புதுச்சேரி: கட்செவி அஞ்சல் குழுவைத் தொடங்கியதற்காக பாட்கோ நிறுவன ஊழியர்களுக்கு நிர்வாகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நவீன செல்லிடப் பேசியில் நண்பர்கள் கட்செவி அஞ்சல் குழுவை ஆரம்பித்து ஒருவருக்கொருவர் பேசி வருகின்றனர். இதே போல் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களைப்போல், அரசுத்துறைகளில் பணிபுரியும் ஊழியர்களும், நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களும் குழுவை ஆரம்பித்து தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக்கொண்டு வருகின்றனர்.
அதுபோல் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் புதுச்சேரி ஆதிதிராவிடர் மேம்பாட்டு கழக நிறுவனமான பாட்கோவில் பணியாற்றும் ஊழியர்களில் சிலர் பாட்கோ இன்ஜினியரிங் விங் என்ற பெயரில் கட்செவி அஞ்சல் குழுவை உருவாக்கி அரசு அலுவலக தகவல்களையும் பரிமாறி வந்துள்ளனர். இது குறித்து நிறுவன அதிகாரிகளுக்கு புகார் சென்றுள்ளது.
இதனை அடுத்து பாட்கோ மேலாண் இயக்குனர் ரகுநாதன் குழுவை உருவாக்கி செயல்பட்டுவரும் ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி அரசு பணியாளர்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை சமூக வலைதளத்தில் அரசு ஊழியர்கள் குழுவை உருவாக்கி செயல்படக்கூடாது என கூறியுள்ளது. இதுபோன்ற நிலையில் பாட்கோவில் பணிபுரியும் ஊழியர்கள் பாட்கோ இன்ஜினியரிங் விங் என்ற பெயரில் குழுவை உருவாக்கி அரசு அலுவலக தகவல்களை பரிமாறி வருவதாக கவனத்திற்கு வந்துள்ளது.
இது நடத்தை விதிகளை மீறிய செயலாகும். எனவே மேலே குறிப்பிட்டுள்ள அனைவரும் அரசு நடத்தை விதி முறை மீறியது குறித்து ஏன் தங்கள் மீது ஒழுங்கீன நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்கு 3 தினங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இது அரசு ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.