குமரி மாவட்டத்தில் வெயில் கொளுத்தும் நிலையில், திற்பரப்பு அருவியில் மிதமான அளவில் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவும் நிலையில் ஆறுகள் வறண்டுள்ளன. குறிப்பாக தாமிரவருணியாறு வறண்டுள்ளதால் ஆறுகள் கடலில் கலக்கும் முகத்துவாரத்தின் வழியாக கடல் நீர் உள்புகுந்து குடிநீர் உப்பு நீராக மாறி வருகிறது.
இந்நிலையில் குடிநீர் உப்பு நீராக மாறுவதைத் தடுக்கும் வகையில் பேச்சிப்பாறை அல்லது சிற்றாறு அணைகளிலிருந்து குறைந்தபட்ச அளவு தண்ணீரை கோதையாறு வழியாக தாமிரவருணியாற்றில் திறந்து விட வேண்டுமென்று மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, சிற்றாறு 2 அணையிலிருந்து விநாடிக்கு 50 கன அடி தண்ணீர் வெளியேறப்பட்டு வருகிறது. மேலும், அணையின் மதகு சீரமைக்கும் பணியின்போது மதகு சேதமடைந்ததாலும் குறிப்பட்ட அளவு தண்ணீர் வெளியேறி கோதையாற்றில் கலக்கிறது. தற்போது மதகை சீரமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இருவிதத்தில் தண்ணீர் வெளியேறுவதால், அணையின் நீர்மட்டம் மிகவும் அதல பாதாளத்துக்கு சென்றுவிட்டது.
இதனிடையே, இந்த அணையிலிருந்து வெளியேறும் தண்ணீர் திற்பரப்பு அருவியில் மிதமான அளவில் கொட்டுவதால், சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் மக்களும் வெயிலுக்கு இதமாக உற்சாகமாக நீராடி மகிழ்கின்றனர்.