புது தில்லி, : ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக பொது கணக்குக் குழு (பிஏசி) முன்பு ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ஏற்கெனவே அறிவித்தபடி வரும் 20-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று அக்குழுவின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கே.வி. தாமஸ் தெரிவித்தார். இதுதொடர்பாக தில்லியில் அவர் பிடிஐ செய்தியாளரிடம் இன்று கூறியதாவது:
ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு 20-ஆம் தேதி விளக்கம் அளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, உர்ஜித் படேல் ஆஜராக வேண்டும். அதேநேரத்தில், மத்திய நிதியமைச்சக அதிகாரிகளுக்கும் முன்பு 20-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அது தற்போது பிப்ரவரி மாதம் 10-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டுக்கான தயாரிப்புப் பணியில் ஈடுபட்டிருப்பதால், தங்களுக்கு அவகாசம் வேண்டும் என்று நிதியமைச்சக அதிகாரிகள் கேட்டிருந்தனர். அதையேற்று அவர்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என்றார் கே.வி. தாமஸ்.