புதுச்சேரி சட்டப்பேரவையை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டம்
முதலியார்பேட்டையில் பாஜக மாநில துணைத் தலைவர் செல்வத்தின் கடை மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க
புதுச்சேரி: முதலியார்பேட்டையில் பாஜக மாநில துணைத் தலைவர் செல்வத்தின் கடை மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புதுச்சேரி சட்டப்பேரவையில் அக்கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெறவும், மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் புதுச்சேரியில் சனிக்கிழமை பந்த் போராட்டம் நடைபெற்றது. இதனால் நகரின் அனைத்துப் பகுதிகளிலும் காலை 6 மணி முதல் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
ஆனால் முதலியார்பேட்டையில் பாஜக மாநில துணைத் தலைவர் செல்வத்தின் கடை உள்ளது. அக்கடையை வழக்கம் போல் திறக்கப்பட்டது. இதனால் அங்கு வந்த பந்த் போராட்டக்குழுவினர் அதை மூடுமாறு கேட்டனர். ஆனால் அதற்கு செல்வம் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் கடையை அடித்து சேதப்படுத்தி சென்று விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பாஜகவினர், 50}க்கு மேற்பட்டோர் நேராக இரு சக்கர வாகனங்களில் சட்டப்பேரவைக்கு சென்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதனால் பேரவைக் காவலர்கள் நுழைவுவாயில் கேட்டை மூடி விட்டனர். அதையும் மீறி ஏறிய சில பாஜக தொண்டர்கள் நுழைவுவாயில் மீது கட்சிக் கொடியை கட்டினர். அதை பேரவை காவலர்கள் அகற்றினர். பின்னர் அங்கிருந்து டிஜிபி அலுவலகத்தில் முற்றுகையிடுவதற்காக பாஜகவினர் சென்ற போது, தடுப்புகளை அமைத்து போலீஸôர் தடுத்தனர்.
பின்னர் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சி நிர்வாகிகள் சிலர் டிஜிபி சுனில்குமார் கெüதமிடம் சென்று கடையை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்தனர்.