புதுவை பல்கலை பதிவாளராக பிஆர்.பாபு ஐஏஎஸ் நியமனம்
புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் புதிய பதிவாளராக புதுச்சேரி அரசு துறைமுகம், சுகாதாரத் துறை செயலாளர் பிஆர்.பாபு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி: புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் புதிய பதிவாளராக புதுச்சேரி அரசு துறைமுகம், சுகாதாரத் துறை செயலாளர் பிஆர்.பாபு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்த சந்திரா கிருஷ்ணமூர்த்திக்கும், பதிவாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி ராஜிவ் யதுவன்ஷிக்கும் இடையே நிர்வாக ரீதியில் மோதல்கள் ஏற்பட்டன. பதிவாளரை செயல்படவிடாமல் துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தி செயல்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதற்கிடையே அவர் பணிமாறுதலில் சென்று விட்டார்.
இதற்கிடையே பல்வேறு புகார்கள் எதிரொலியாக சந்திரா கிருஷ்ணமூர்த்தியும், பதவியில் இருந்து குடியரசுத் தலைவரால நீக்கப்பட்டார். இந்நிலையில் துணைவேந்தர் பதவிக்கு டாக்டர் அனிஷா பஷிர் கான் பொறுப்பாக நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறார். பதிவாளர் (பொ) டாக்டர் ராமச்சந்திரன் செயல்பட்டு வருகிறார்.
இதற்கிடையே பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகளை சீரமைக்கும் வகையில் நிரந்தர துணைவேந்தர், பதிவாளர் பணியிடங்களை நிரப்பட்ட மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நடவடிக்கை எடுத்தது. அதன்படி பதிவாளர் பொறுப்புக்கு பிஆர்.பாபு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி அரசு செயலாளரான அவர் ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதியோடு பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார். இந்நிலையில் அவர் பதிவாளர் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளதால் உடனே விடுவிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
புதுவை பல்கலைக்கழக பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ள பாபு ஐஏஎஸ் 1.9.2017 முதல் 31.8.2019 வரை பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுவை பல்கலைக்கழக பதிவாளராக மீண்டும் ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளது பல்கலை வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.