புதுச்சேரி: குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துளளது. இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான ந.ரங்கசாமி கூறியுள்ளதாவது:
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுளள ராம்நாத் கோவிந்துக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து, பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து, பணிபுரிந்து வரும் அவருக்கு என்.ஆர். காங்கிரஸ் முழு ஆதரவைத் தரும் என்றார் ரங்கசாமி.
30 சட்டப்ரேவை உறுப்பினர்களை கொண்ட புதுச்சேரி சட்டப்பேரவையில் 8 உறுப்பினர்களை கொண்ட என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பிரதான எதிர்கட்சியாக திகழ்கின்றது.
மேலும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியுடன் போட்டியிட்டு என்,ஆர்,காங்கிரஸ் வெற்றி பெற்றது. இருப்பினும் கடந்த பேரவைத் தேர்தலில் கூட்டணி வைக்கவில்லை தற்போது பாஜக அறிவித்த வேட்பாளருக்கு ஆதரவளித்ததன் மூலம் அக்கட்சியுடன் மீண்டும் கூட்டணி அமைக்கின்றது என்.ஆர்.காங்கிரஸ்.
இதற்கிடையே அக்கட்சிக்கு மக்களவையில் ஒரு எம்.பி. உள்ளார். ஆனால் சட்டப்பேரவையில் உள்ள 8 எம்.எல்.ஏக்கள் கட்சியில் வேறுபாடு தோன்றியுள்ளது. டிபிஆர். செல்வம் எம்.எல்.ஏ., காரைக்கால் எம்.எல்.ஏ. திருமுருகன் ஆகியோர் தனித்து செயல்பட்டு வருகின்றனர். மொத்தம் 5 எம்.எல்.ஏக்கள் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பார்கள் எனத் தெரிகிறது.