சவூதி அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் பணி: விண்ணப்பிக்க அழைப்பு
சவூதி அரேபியாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரிய விரும்பும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரிய விரும்பும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சவூதி அரேபிய அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய அவசர மருத்துவம், எலும்புமுறிவு, மகளிர் மகப்பேறு மருத்துவம், தீவிர சிகிச்சைப் பிரிவு, மயக்க மருத்துவம், இன்டர்னல் மெடிசன், குழந்தை மருத்துவம், ரேடியாலஜி, நரம்பு அறுவை சிகிச்சை, குடும்ப சிகிச்சை, பொது மருத்துவம் ஆகிய பிரிவுகளில் அலோபதி மருத்துவர்கள் தேவைப்படுகின்றனர்.
இந்தப் பணிக்கான நேர்முகத் தேர்வு தில்லியில் வரும் 21 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையிலும், ஹைதராபாத்தில் 25ஆம் தேதி மற்றும் 26 ஆம் தேதிகளிலும் நடைபெறுகிறது. 2 ஆண்டு பணி அனுபவம் மற்றும் 55 வயதுக்குள்பட்ட கன்சல்டன்டுகள் மற்றும் சிறப்பு மருத்துவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர் ஆவர்.
தேர்ந்தெடுக்கப்படும் சிறப்பு மருத்துவர்களுக்கு அனுபவத்துக்கு ஏற்ப ரூ.1.84 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.7.59 லட்சம் வரையிலும் ஊதியம் வழங்கப்படும். மேலும், சிறப்புத் தகுதிக்கான சலுகையாக 20 முதல் 50 சதவீத ஊதியத்துடன், இலவச உணவு, இருப்பிடம், விமான டிக்கெட், குடும்ப விசா மற்றும் சவூதி அரேபிய அரசின் சட்டத் திட்டத்திற்குள்பட்ட இதர சலுகைகள் வேலையளிப்போரால் வழங்கப்படும்.
விருப்பமும் தகுதியும் உள்ள மருத்துவர்கள் தங்களின் முழு விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை ovemcldr@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். மேலும், விவரங்களுக்கு www.omcmanpower.com என்ற இணையதள முகவரியிலோ அல்லது 044-22505886, 22502267, 22500417 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.