புதுதில்லி: தில்லியின் துக்லகாபாத் பகுதியில் இன்று சனிக்கிழமை காலை ஏற்பட்ட ரசாயன வாயு கசிவு காரணமாக அப்பகுதியில் அமைந்துள்ள பள்ளி மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோருக்கு திடீர் மயக்கம், கண் எரிச்சல் ஏற்பட்டது. இதையடுத்து மாணவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தென் கிழக்கு தில்லியில் துக்லகாபாத் பகுதியில் ராணி ஜான்சி சர்வோதய கன்யா வித்யாலா பள்ளி உள்ளது. காலை வழக்கம் போல் பள்ளிக்கு மாணவர்கள் சென்றுள்ளனர்.
அப்போது, அப்பகுதியில் திடீரென ரசாயன வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் பள்ளி மாணவர்களுக்கு கண் எரிச்சல், மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த ஆசிரியர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து தீயணைப்பு வீவர்கள் மாணவர்களை உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது மாணவர்கள் உடல் நலன் சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். சிலர் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அப்பள்ளி ஆசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.