ஆளுநர் மாளிகை நோக்கி இன்று அமைதி பேரணி: காவிரி உரிமை மீட்பு ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, சென்னை எழும்பூரில் இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி இன்று அமைதி பேரணி நடத்த
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, சென்னை எழும்பூரில் இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி இன்று அமைதி பேரணி நடத்த உள்ளதாக காவிரி உரிமை மீட்பு ஒருங்கிணைப்பு குழுவினர் அறிவித்துள்ளனர்.
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கடந்த 1-ஆம் தேதி முதல் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், ரயில் மறியல், மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை, உண்ணாவிரதப் போராட்டம் என தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதனால் ஒட்டுமொத்த தமிழகமே போராட்டக்களமாக மாறியுள்ளது.
இந்நிலையில், மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி ஒருங்கிணைப்பு குழு சார்பில் காவிரிக்காக உயிர்நீத்த விக்னேஷ்வரன் நினைவாக சென்னை எழும்பூரில் இருந்து இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு ஆளுநர் மாளிகை நோக்கி அமைதி பேரணி நடைபெறுகிறது என மிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், உழவே தலை ஒருங்கிணைப்பாளர் சந்திரமோகன், நடிகர்கள் அமீர், ஆரி ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
Advertisement
மேலும் அரசியல் சார்பில்லாமல் காவிரி உரிமைக்காக தமிழர்களாக நாம் அனைவரும் ஒன்றுகூடுவோம். பேரணி முடிவில் ஆளுநரை சந்தித்து குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்த கோரிக்கை மனு அளிக்க உள்ளதாகவும். துணைவேந்தர் நியமனம் தொடர்பாகவும் கோரிக்கை மனுவில் தெரிவிக்க உள்ளதாக தெரிவித்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாநில அரசு உறுதியாக முன்னெடுத்து வைக்க வேண்டும் என்றவர்கள் தமிழகம் என்ன சூழலில் இருக்கிறது என்பதை ஆளுநர், மத்திய அரசிடம் எடுத்துக்கூற வேண்டும் என்று தெரிவித்தனர்.
வருகிற 12-ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருவதற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் அவருக்கு எந்த மாதிரியான வரவேற்பை தமிழர்கள் கொடுப்பார்கள் என்பது தெரியாது என்று எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தொடர் போராட்டம் நடத்த மாநில அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் இடம் ஒதுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.